சிட்டிலிங்கி பள்ளத்தாக்கில் உள்ள சில ஆதிவாசி ஆண்கள் இப்போது மீண்டும் பள்ளிக்கு திரும்பி வந்துள்ளனர். ஆனால், இந்த முறை அவர்கள் கல்வி கற்பதற்காக வரவில்லை, மாறாக துளிர் பள்ளிக்கு புதிய வளாகத்தை கட்டுவதற்காக வந்திருக்கின்றனர்.
அவர்களில் 29 வயதாகும் எலக்ட்ரீசியனான A. பெருமாள், ஒரு காலை வேளையில் வயர்கள் மற்றும் அதற்கான வழித்தடங்களை அமைத்துக் கொண்டு இருந்தார். "தரை மட்டத்தில் இருக்கும் அந்த சிறிய காற்றோட்டத்திற்கான வசதியை பார்க்கிறீர்களா? இதன் மூலம், சிறிய குழந்தைகள் கூட நல்ல காற்றைப் பெற முடியும்", என்று அவர் கூறுகிறார். இந்தக் கட்டிட தளத்தில் வேலை செய்வதற்காக பெருமாள் தனது தேவை அதிகமுள்ள தொலைக்காட்சி மற்றும் மின்விசிறி சரி செய்யும் பணியை ஒதுக்கி வைத்துவிட்டு வந்திருக்கிறார்.
அருகில் இருந்த 24 வயதாகும் M. ஜெயபால் நேர்த்தியான செங்கற்களைப் பயன்படுத்தி கட்டுமானங்களைக் கட்டுவதில் வல்லமை கொண்ட கொத்தனார், ஆனால் அவர் களிமண் சாந்தைக் கொண்டு தூண்களில் உள்ள வடிவமைப்புகளுக்கு வடிவங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். பள்ளத்தாக்கில் அவர் பயின்ற அரசுப் பள்ளியில் காகிதங்களையோ, க்ரையான்களையோ உபயோகித்ததே கிடையாது. அவர் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், முதல் அடிக்கல் நாட்டப்பட்டதில் இருந்து இங்கு வேலை செய்து வருகிறார். புதிய பள்ளி வளாகத்தில் தச்சராகவும் பணி செய்கிறார். அவரும் மற்றவர்களும் அங்கு தேவை ஏற்படும் போதெல்லாம் வந்து வேலை செய்து கொடுக்கின்றனர், அவர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு, 500 ரூபாய் வழங்கப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு துளிரின் பள்ளிக்குப் பிறகான பயிற்சி திட்டங்கள் துவங்கப்பட்ட பிறகு, அதில் அவர்களுக்கு முதல் பாடமாக கட்டுமான கலையே பயிற்றுவிக்கப்பட்டது. சிட்டிலிங்கி உள்ளூர் அரசுப் பள்ளியைச் சேர்ந்த துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜெயபால் மற்றும் பிற மாணவர்களும், அறிவியலை கையால் செய்யக்கூடிய பரிசோதனைகளின் மூலமும், வரைகலையை வரைவதன் மூலமும் மற்றும் மொழியினை புத்தகங்களின் வாயிலாகவும் ஆராய்ந்து கற்றனர்.









