“காலைல அஞ்சு மணிக்கு வெறுங் கால்ல நாங்க நடக்க வேண்டியிருந்தது. பிலோஷிக்கு போகணும். எந்த வண்டியும் கிடையாது. எங்க முதலாளி ஆளுக்கு ஆயிரம் ரூபா கொடுத்தாரு.அதிலதான் நாங்க உப்பு, புளி, மிளகா எல்லா வாங்க வேண்டியிருந்தது. எங்களால வீட்டுக்குப் போக முடியலன்னா நாங்க எதை சாப்பிடுவோம்?.எங்க கிராமத்தில இருந்து ஒருத்தரு போன் செஞ்சு ‘ நீங்க இப்போ ஊருக்கு வந்து சேரலைன்னா அப்புறம் இரண்டு வருஷத்துக்கு வர முடியாது. நீங்க எங்க இருக்கிறீங்களோ அங்கயேதான் இருக்கணும்’னு சொன்னாரு.”
அப்படித்தான் எல்லா மக்களும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் தங்களது பைகளை தலைகள் மீது சுமந்திருந்தார்கள். அவர்களின் தோள்களில் குழந்தைகளை தூக்கிக்கொண்டு சுடும் வெயிலில் நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். எனது கிராமத்தின் வழியாக அவர்கள் போய்க்கொண்டிருந்ததை பார்த்தேன். அவர்கள் எங்கே போகிறார்கள் என்று விசாரித்தேன். மொத்தம் அவர்கள் 18 பேர். மகாராஷ்ட்ர மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில் உள்ள வாதா கோட்டத்தில் உள்ள பிலோஷி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்கள் வாசை கோட்டத்தைச் சேர்ந்த பாட்டனே கிராமத்தில் உள்ள செங்கல்சூளைகளுக்கு வேலை தேடிப் போய் சேர்ந்தவர்கள். மகாராஷ்ட்ரத்தின் பழங்குடி இனங்களில் ஒன்றான கட்காரி எனும் சமூகத்தைச் சேர்ந்த அவர்களில் பெண்கள், ஆண்கள், மட்டுமல்ல, குழந்தைகளும் இருந்தனர்.
அவர்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய கவலை இருந்தது. பொதுப் போக்குவரத்தை நிறுத்திவிட்டார்கள் என்பதால் அவர்கள் வீடு திரும்புவதற்கு எந்தவிதமான வாகனமும் கிடைக்கவில்லை. என்ன பாடுபட்டாவது ஊருக்கு வந்து சேர்ந்து விடுங்கள் என்று அவர்களது கிராமத்திலிருந்து கண்டிப்பான செய்தியை அனுப்பியிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் நடைபயணமாகவே போய்விடலாம் என்று கிளம்பிவிட்டார்கள். மார்ச் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு அவர்கள் எனது நிம்பாவளி கிராமத்துக்கு வந்தார்கள்.
“சூரியன் கொதித்துக்கொண்டிருந்துச்சு. தலை மேல சுமையை வச்சுகிட்டு நான் நடந்துட்டிருந்தேன். அப்படியே கீழே விழுந்துட்டேன். அதனால எனக்கு அடிபட்டிருச்சு” என்று கால் முட்டிகளை காட்டுகிறார் 45 வயதான பெண்மணி கவிதா திவா. அவருக்குப் பக்கத்தில் 20 வயதான சப்னா வாக் உட்கார்ந்திருந்தார். அவர் தனது வயிற்றில் ஆறு மாத கருவைச் சுமந்துகொண்டிருக்கிறார். 23 வயதான கிரண் வாக்கும் கவிதாவுக்கும் கல்யாணம் ஆனதிலிருந்தே அவர்கள் இருவரும் செங்கல் சூளையில்தான் வேலை செய்கிறார்கள். எல்லாவற்றையும் நிறுத்திவிட்டதால் கவிதாவும் வீடு திரும்புகிறாள். அவளது தலையிலும் சுமந்து செல்கிறாள். வயிற்றிலும் சுமந்து செல்கிறாள்.



