“என்னுடைய வாழ்க்கைக் கதையை உங்களிடம் நம்பி சொல்லலாமா?”
நேரடியாக உங்களை தாக்கும் சவால் மிகுந்த கேள்வி இது. கேள்வி கேட்டவருக்கு கேள்விக்கான நியாயமான காரணங்கள் இருந்தன. தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜனனியின் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) வார்த்தைகளில் சொல்வதெனில், “காசநோய் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டது.”
அவருக்கு திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. மகனுக்கு நான்கு மாதமாக இருந்தபோது காசநோய் தொற்றியது. “மே 2020ல் தொற்று வந்தது. அதற்கு முன் ஒரு மாதமாகவே அறிகுறிகள் (தீவிர இருமல் மற்றும் காய்ச்சல்) இருந்தன.” வழக்கமான பரிசோதனைகள் எல்லாமும் தோல்வியுற்றபின், மருத்துவர்கள் காசநோய்க்கான பரிசோதனை எடுக்கக் கூறினர். “காசநோய் உறுதியானதும் நான் உடைந்துவிட்டேன். எனக்கு தெரிந்த யாருக்கும் அது நடக்கவில்லை. எனக்கு தொற்று வருமென நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை.
”கிராமத்தில் களங்கத்துக்குள்ளாக்கப்பட்டு சமூக புழக்கம் எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு வரும் நோய் எனக்கு வருமென நான் நினைக்கவில்லை!”
27 வயது ஜனனியிடம் அதுவரை அன்பாக இருந்த கணவர், தனக்கும் பரவக்கூடிய நோயை பெற்றதற்காக அவருடன் தொடர்ந்து சண்டை போடத் தொடங்கினார். “என்னை வார்த்தையாலும் உடல்ரீதியாகவும் தாக்குவார். நாங்கள் மணம் முடித்துக் கொண்ட ஒரு வருடத்தில் சிறுநீரக கோளாறு காரணமாக அவரின் தாய் இறந்துவிட்டார். ஆனால் அவரின் மறைவுக்கும் நானே காரணம் என கணவர் சொல்லத் தொடங்கினார்.”
அச்சமயத்தில் தீவிர ஆபத்தில் இருந்த ஒரே நபர் யாரென்றால் ஜனனி மட்டும்தான்.
இந்தியாவின் தொற்றுநோய்களிலேயே காசநோய்தான் பெருமளவுக்கு மரணங்களை ஏற்படுத்தும் நோயாக இருக்கிறது.










