ஷோபா சாஹ்னி தனது மகனின் மரணத்திற்கான காரணம் தனக்குத் தெரியும் என்று நினைத்திருந்தார். ஆனால் ஏழு மாதங்களுக்குப் பிறகு, அவரால் அதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
பிப்ரவரி மாதம் மதிய வேளையில், பிரம்மசரி கிராமத்தில் உள்ள தனது ஒற்றை அறை கொண்ட வீட்டின் வாசலில் அமர்ந்தபடி, ஆறு வயது மகன் ஆயுஷ் உடல்நலம் குன்றியதை நினைவுகூர்ந்தார். “அவனுக்கு காய்ச்சலும், வயிற்று வலியும் இருந்தது,” என்றார் அவர்.
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள 2021 ஜூலை கடைசியில் மழை பெய்ததால் அவர்களின் கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் அந்த வெள்ளம் அசாதாரணமானது. “இது ஆண்டுதோறும் நிகழ்கிறது,” என்கிறார். “தண்ணீர் செல்வதற்கு வழியில்லை.”
ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் பிரம்மசரியில் வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது. பசுச்சாணம், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் மனித கழிவுகள், கிராமம் முழுவதும் சிதறிக் கிடக்கும் குப்பைகள் யாவும் தண்ணீரில் கலந்து விடுகின்றன. “தண்ணீரில் விஷப்பூச்சிகளும், கொசுக்களும் உற்பத்தியாகின்றன. சமைக்கும் இடம் வரை அழுக்கு தண்ணீர் வீடுகளுக்குள் நுழைந்துவிடுகிறது,” என்கிறார் ஷோபா. “எவ்வளவு முயன்றாலும் எங்கள் பிள்ளைகள் தண்ணீரில் விளையாடுவதைத் தடுக்க முடியவில்லை. மழைக்காலங்களில் இங்குள்ள மக்கள் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர்.”
கடந்த ஆண்டு அவரது மகனை பாதித்துவிட்டது. “நாங்கள் முதலில் பர்ஹல்கஞ்ச், கிச்ரிகஞ்சில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் அவனுக்கு சிகிச்சை அளித்தோம். ஆனால் பலனில்லை,” என்கிறார் ஷோபா.
காய்ச்சல் வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, 7 கிலோமீட்டர் தொலைவில் பெல்காட்டில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு (CHC) ஆயுஷை ஷோபா அழைத்துச் சென்றார். பிரம்மசரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கொரக்பூரில் உள்ள பாபா தாஸ் மருத்துவக் கல்லூரிக்கு அவனை (பிஆர்டி மருத்துவக் கல்லூரி) அழைத்துச் செல்ல பரிந்துரைக்கப்பட்டது.










