“பதினான்கு, பதினாறு, பதினெட்டு...” என்று எண்ணியபடி கழுதை அத்தியாவின் முதுகில் சுடாத செங்கற்களை ஏற்றுகிறார் காண்டு மானி. பிறகு கழுதையைப் பார்த்து: “ச்சலா... ஃபிர்....ஃபிர்...” என்று சொல்கிறார். அத்தியாவைப் போன்ற மேலும் இரு கழுதைகளும் பாரத்தை சுமந்தபடி தோராயமாக 50 மீட்டர் தூரத்திலுள்ள சூளையை நோக்கி நடக்கின்றன. அங்கு சுடுவதற்காக கற்கள் இறக்கப்படும்.
“இன்னும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நாங்கள் ஓய்வெடுப்போம்,” என்கிறார் காண்டு. காலை 9 மணி தானே ஆகிறது என நாங்கள் வியப்படைந்தபோது, அவர் விளக்குகிறார்: “நாங்கள் நள்ளிரவு ஒரு மணிக்கு வேலையைத் தொடங்கினோம். காலை 10 மணிக்கு எங்கள் பணி நேரம் முடியும். ராத்பர் ஹி அஸச் சலு ஆஹி [நாங்கள் இரவு முழுவதும் இங்கு இருக்கிறோம்].”
சூளையிலிருந்து காலியான சாக்குகளுடன் காண்டுவின் நான்கு கழுதைகள் திரும்புகின்றன. பிறகு அவர் மீண்டும் தொடர்கிறார்: “பதினான்கு, பதினாறு, பதினெட்டு...”
திடீரென “ருக்கோ...” என்று கழுதைகளில் ஒன்றை இந்தியில் அவர் அழைக்கிறார். “எங்கள் உள்ளூர் கழுதைகளிடம் மராத்தியில் பேச வேண்டும். இது மட்டும் ராஜஸ்தானிலிருந்து வந்தது. இந்தியில்தான் உத்தரவிட வேண்டும்,” என்கிறார் அவர் அன்பொழுகும் சிரிப்புடன். நம்மிடம் அதை அவர் விளக்கியும் காட்டுகிறார்: ருக்கோ என்றதும் கழுதை நிற்கிறது. சலோ என்றதும் நகர்கிறது.
இந்த நான்கு கால் நண்பர்கள் தான் காண்டுவின் பெருமை என்பது தெளிவாகிறது. “லிம்பூவும், பந்தர்யாவும் மேய்ச்சலுக்குச் சென்றுள்ளனர், எனக்கு பிடித்தமான புல்லட். உயரமாகவும், சமர்த்தாக, அதிவேகமாக இருப்பாள்!”
















