நாங்கள் தாமதமாகச் சென்றிருந்தோம். “அவரது கிராமத்திலிருந்து உங்களை தேடி இரண்டு முறை வந்து சென்றுவிட்டார் கணபதி பால யாதவ்” என்றார் ஷிர்காவ்னைச் சேர்ந்த ஊடக நண்பரான சம்பத் மோர். “இரண்டு முறையும் திரும்பவும் அவரது கிராமமான ரமாபூருக்கு சென்றுவிட்டார். நீங்கள் வந்து சேர்ந்துவிட்டீர்கள் என்று தகவல் சொன்னால் மூன்றாம் முறை வருவார்” என்றார். இரண்டு கிராமங்களுக்குமிடையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிருக்கும். அந்த தொலைவை சைக்கிளில் கடக்கிறார் கணபதி யாதவ். மூன்று முறை வந்து போவதென்பது முப்பது கிலோமீட்டர், அதுவும் மே மாத மத்தியில் ஒரு கொளுத்தும் நாளில், மிக மோசமான ஒரு சாலையில் அதுவும் 25 வருடம் பழமையான ஒரு சைக்கிளில். சைக்கிளை ஓட்டியவருக்கு வயது 97.
மகராஷ்டிராவின் சங்கிலி மாவட்டம் கதேகாவ்ன் தொகுதியில் ஷிர்காவ்னில் இருந்த மோரின் தாத்தா வீட்டில் மதிய உணவுக்கு நாங்கள் தயாராகி கொண்டிருந்த போது கணபதி பால யாதவ் மிக அமைதியாக அவரது வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தார். இந்த வெய்யிலில் அவரை அவ்வளவு தூரம் அலைகழித்தது பற்றி நான் தொடர்ந்து மன்னிப்புக் கேட்டது அவருக்கு வேடிக்கையாக இருந்தது. ”அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை” என்று தன்மையான குரலில் ஒரு மென்சிரிப்புடன் சொன்னார். “நேற்று மதியம் ஒரு திருமணத்துக்காக விதாவிற்கு சென்று வந்தேன். அதுவும் இந்த சைக்கிளில்தான். அப்படிதான் பொதுவாக போய் வருகிறேன்” என்றார் அவர். ரமாபூரிலிருந்து விதாவுக்குச் சென்று திரும்புவது என்பது கிட்டத்தட்ட 40 கி.மீ பயணம். அதுவும் முந்தைய நாள் வெயில் கடுமையாக அடித்த்து. 40 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு இருந்தது.
“ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்புவரை பந்தாபூருக்கு சைக்கிளிலேயே சென்று வருவார். கிட்டத்தட்ட 150 கி.மீ” என்கிறார் சம்பத் மோர். ”இப்போதெல்லாம் அவ்வளவு தூரம் பயணிப்பதில்லை.”







