வறட்சிக்கு பெயர் பெற்ற நிலத்தில் ஒரு நாட்டுப்புறப் பாட்டு, ‘இனிய தண்ணீர்’ என கட்ச் பகுதியின் பலதரப்பட்ட பண்பாடுகளையும் மக்களையும் கொண்டாடிப் பாடுகிறது.
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் (கிபி 920) லக்கோ ஃபுலானி என்பவர் வாழ்ந்தார். கட்ச், சிந்த் மற்றும் சவுராஷ்ட்ரா பகுதிகளை ஆண்டார். அன்பானவராகவும் மக்களுக்கான அரசராகவும் அறியப்பட்டவர். அவரது தயாள குணம் நிரம்பிய ஆட்சியை நினைவுகூரும் மக்கள் இப்போதும் அவரைக் குறித்து பேசுகையில், “பல பேர் லக்கோவின் பெயரைக் கொண்டிருக்கலாம். ஆனால் மக்களின் இதயங்களை ஆளும் லக்கோ ஃபுலானி ஒரே ஒருவர்தான்,” எனக் குறிப்பிடுகின்றனர்.
அவரைக் குறிப்பிடும் பாடல், இப்பகுதியின் பண்பாட்டின் அடிப்படையான மத நல்லிணக்க உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. கட்ச் பகுதியின் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாக செல்லக்கூடிய பல வழிபாட்டுத் தலங்கள் அங்கு உள்ளன. ஹஜிபிர் வாலி தர்காவும் தேஷ்தேவி ஆஷாபுராவும் அத்தகைய தலங்கள்தாம். கரகொத் கிராமத்தில் ஃபுலானி கட்டியிருக்கும் கோட்டை பற்றிய வரலாற்று தகவல்களையும் இப்பாடல் கொண்டிருக்கிறது.
காதல், ஏக்கம், இழப்பு, திருமணம், பாலின விழிப்புணர்வுக்கான தாய்நிலம், ஜனநாயக உரிமைகள் போன்ற பல விஷயங்கள் இப்பாடல் தொடுகிறது.
பாரியின் கட்ச்சி நாட்டுப்புற பாடல்களின் பல்லூடக காப்பகத்தில் 341 கட்ச் பாடல்கள் இருக்கின்றன. இதில் இருக்கும் பாடல் உள்ளூர் கலைஞர்களால் பூர்விக மொழியில் பாடப்பட்டது. வாசகர்களுக்கு இப்பாடல், குஜராத்தியிலும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சேர்த்து பாரி பிரசுரமாகும் 14 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஓர் இலகுவான பல்லுயிர் அமைப்பின் 45,612 சதுர கிலோமீட்டர்களை கட்ச் கொண்டிருக்கிறது. தெற்கில் கடலும் வடக்கில் பாலைவனமும் கொண்ட பகுதி. இந்தியாவின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான கட்ச், வறண்ட பகுதிகளில் ஒன்று. நீர் பற்றாக்குறையாலும் பஞ்சத்தாலும் அவ்வபோது அப்பகுதி பாதிக்கப்படுவதுண்டு.
பலதரப்பட்ட சாதிகளும் மதங்களும் சமூகங்களும் கட்ச்சில் வசிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் 1000 வருடங்களுக்கு முன் இடம்பெயர்ந்தோரின் வழிதோன்றல்கள். இந்துக்கள், இஸ்லாமியர்கள், சமணர்கள் வாழும் அங்கு ரபாரி, கத்வி, ஜாட், மெக்வால், முத்வா, சோதா ரஜ்புட், கோலி, சிந்தி மற்றும் தர்பார் குழுக்களும் இருக்கின்றன. கட்ச்சின் செறிவு நிறைந்த பன்முக பாரம்பரியம் தனித்துவமான ஆடைகளிலும் பூத்தையலிலும் இசையிலும் பிற பண்பாட்டு பாரம்பரியங்களிலும் பிரதிபலிக்கிறது. கட்ச் மகிளா விகாஸ் சங்காதன் (KMVS) அமைப்பு 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சமூகங்களை ஒருங்கிணைக்கவும் அவர்களின் பாரம்பரியங்களையும் ஆதரிக்கவும் அவ்வமைப்பு இயங்குகிறது.



