ராஜஸ்தான் மாநிலம் மநுவின் லட்சியங்களுக்கு ஏற்ப செயல்படுகிறது. அம்மாநிலத்தில், சராசரியாக ஒவ்வொரு 60 மணி நேரத்திற்கும் ஒரு தலித் பெண் வன்புணரப்படுகிறார். ஒவ்வொரு ஒன்பது நாட்களுக்கு ஒரு முறையும் ஒரு தலித் கொல்லப்படுகிறார். ஒவ்வொரு 65 மணி நேரத்திற்கு ஒரு முறை, தலித் சமூகத்தை சேர்ந்தவர் கடுமையான காயங்கள் ஏற்படுத்தும் வகையில் தாக்கப்படுகிறார். ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு தலித்தின் வீடு அல்லது உடைமைக்கு தீ வைக்கப்படுகிறது. ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை ‘மற்ற ஐ.பி.சி’ (இந்திய தண்டனை சட்டத்தின்) வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதாவது, கொலை, கற்பழிப்பு, தீ காயம் மற்றும் கடும் தாக்குதல் அல்லாத வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
தவறு இழைத்தவர்களுக்கு அரிதாகவே தண்டனை கிடைக்கிறது. அதுவும் 2 முதல் 3 சதவிகிதம் மட்டுமே உள்ளது. மேலும், தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் நீதிமன்ற அறைகளுக்கு கூட கொண்டு செல்லப்படுவதில்லை.
எண்ணற்ற புகார்கள் வெறும் இறுதி அறிக்கைகளாக மட்டுமே முடித்து வைக்கப்படுகிறது. உண்மையான தீவிரமான பல வழக்குகள் அவசர அவசரமாக முடித்து வைக்கப்படுகின்றன.
“பிரச்சனை கிராமத்திலேயே தொடங்குகிறது”, என்கிறார் பன்வாரி தேவி. அவருடைய மகள் அஜ்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வல்லுறவு செய்யப்பட்டார். “கிராமத்தில் உள்ளவர்கள் சாதி பஞ்சாயத்து நடத்துகிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை தாக்குதல் நடத்தியவர்களுடன் சமரசம் செய்ய சொல்கிறார்கள். ’ஏன் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும்? நாங்களே எங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்கின்றோம்’ என்கிறார்கள்”
பொதுவாக அங்கு தீர்வு என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் அடக்குமுறையாளர்களுக்கு பணிந்து போவதாகும். காவல்துறையினரிடம் செல்வதிலிருந்து பன்வாரி தடுக்கப்பட்டார்.
எந்த ஒரு வழக்கிலும் தலித் அல்லது ஆதிவாசி ஒரு காவல் நிலையத்திற்குள் நுழைவது தானாகவே ஆபத்தை உருவாக்குகிறது. அவர்கள் அங்கு சென்றால் என்னவாகும்? கும்பர் கிராமத்தில் உள்ள பாரத்பூர் மாவட்டத்தில், சுமார் 20 குரல்கள் ஒரே நேரத்தில் பதில் தந்தன: “இருநூற்று இருபது ரூபாய் நுழைவு கட்டணம்,” என்கின்றனர். “உங்கள் புகாரை நகர்த்த அவர்களுக்கு பல மடங்கு தொகை கொடுக்க வேண்டி வரும்.”
ஒரு உயர் சாதி நபர் தலித் ஒருவரை தாக்கினால், காவல்துறை பாதிக்கப்பட்ட நபரை புகார் அளிக்க விடுவதில்லை. “அவர்கள் எங்களை கேள்வி கேட்பார்கள்”, என்றார் ஹரி ராம், “ஒரு தந்தை மகனை அடிப்பதில்லையா? ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனை அடிப்பதில்லையா? அதுபோல் ஏன் கடந்து செல்லக் கூடாது?”
“மற்றொரு பிரச்சனை உள்ளது,” என்கிறார் ராம் கிலாடி, சிரித்துக்கொண்டே. “காவல்துறையினர் அடுத்த தரப்பினரிடமும் பணம் பெறுகின்றனர்.” அவர்கள் அதிகமான தொகையை வழங்கினால், எங்கள் கதை முடிந்தது. எங்கள் மக்கள் ஏழைகள். அவர்களால் அவ்வளவு செலவு செய்ய முடியாது.” எனவே நீங்கள் 2000 முதல் 5000 ரூபாய் வரை செலவழித்தாலும் பயனில்லை.
அடுத்ததாக, விசாரணை நடத்த வரும் காவல்துறையினர் புகார் அளித்த நபரையே கைது செய்யக்கூடும். இத்தகைய சூழல் உயர் சாதியை சேர்ந்த ஒருவருக்கு எதிராக ஒரு தலித் புகார் அளித்தால் உண்டாகும். பெரும்பாலும், ஆதிக்க சாதியை சேர்ந்தவரே கான்ஸ்டபிள் ஆக இருப்பார்.
“உயர்சாதியினர் என்னை தாக்கிய போது, காவல்துறை துணை காவல் ஆய்வாளர் என் வீட்டு கதவுக்கு வெளியே நின்றிருந்தார்” என்கிறார் அஜ்மரில் இருக்கும் பன்வாரி. “அந்த அதிகாரி எல்லா நேரமும் குடித்துக்கொண்டும் யாதவ் வீடுகளில் சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார். என்னிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார். மற்றொரு முறை எனது கணவர் மிகவும் மோசமாக தாக்கப்பட்டார். நான் காவல் நிலையத்திற்கு தனியாக சென்றிருந்தேன். அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமலே என்னை மோசமாக பேசினர்: ‘நீ எப்படி இங்கு தனியாக வந்தாய், நீ ஒரு பெண் (மற்றும் ஒரு தலித்)?’ என்றனர். அவர்கள் சீற்றம் அடைந்து விட்டனர்”.
கும்ஹரில், சுன்னி லால் ஜாதவ் இவ்வாறு கூறுகிறார்: “சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும் அனைத்து நீதிபதிகளும் ஒரு தனி போலீஸ் கான்ஸ்டபிளிடம் கொண்டிருக்கும் அதிகாரத்துக்கு சமம் கிடையாது.”
“அந்த கான்ஸ்டபிள் எங்களை மாற்றுவார் அல்லது நொறுக்குவார் . நீதிபதிகளால் சட்டத்தை திருத்த முடியாது. அவர்கள் நன்கு கற்று தேர்ந்த வழக்கறிஞர்களிடம் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிய வேண்டும். ஒரு காவல்துறை அதிகாரி இங்கு தன் சொந்த சட்டங்களை உருவாக்குகிறார்.”