சிறிய மூங்கில் குடிலுக்குள் இருக்கும் ஒரு குறுகலான படுக்கையில் மோகினி கவுர் தைக்க வேண்டியத் துணிகள் குவிந்திருந்தன. “நன்றாகவெல்லாம் தைக்க எனக்குத் தெரியாது. முடிந்தவற்றை தைத்துக் கொடுக்கிறேன்,” என்கிறார் புது தில்லியின் ஸ்வரூப் நகரைச் சேர்ந்த 61 வயது மோகினி கவுர். நவம்பர் 2020-ல் சிங்கு போராட்டக் களத்துக்கு அவர் வந்தார். “போராடும் விவசாயிகளுக்கு சேவை செய்வதற்காக நான் இங்கு வந்தேன். அவர்கள் நமக்காக உணவு விளைவிக்கின்றனர். அவர்களுக்கென நான் இந்த விஷயங்களைச் செய்கிறேன்,” என்கிறார் அவர். மோகினி ஒருமுறை கூட வீட்டுக்குச் செல்லவில்லை. டிசம்பர் 9, 2021 அன்று விவசாயச் சங்கங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெறும் வரை அவர் திரும்பிச் செல்லவே இல்லை.
தன்னார்வலராக அவர் சிங்கு போராட்டக் களத்தில் பணிபுரியும் செய்தி பஞ்சாபி செய்தித்தாள் அஜித்தில் வெளியானதைப் படித்து ஈர்க்கப்பட்ட ஒரு வாசகர் மோகினிக்கு உதவ முன் வந்தார். இந்த வருட ஜூலை மாதத்தில் 22 வயது ஹர்ஜீத் சிங் என்ற இளைஞர், மோகினி பார்க்கும் வேலையில் இணைந்து கொண்டார்.
ஹர்ஜீத்திக்கு சொந்தமாக பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் ஒரு தையற்கடை இருக்கிறது. அவரது தந்தை ஒரு விவசாயி. நெல், கோதுமை மற்றும் சோளம் ஆகியவற்றை நான்கு ஏக்கர் நிலத்தில் விளைவிக்கிறார். “என்னுடைய கடையை இரண்டுப் பணியாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு மோகினி அம்மாவுக்கு உதவ ஜூலை மாதம் இங்கு வந்தேன். ஏகப்பட்ட வேலை இங்கு இருக்கிறது. அவரால் தனியாக இவற்றைச் செய்ய முடியாது.”
படுக்கை மற்றும் மேஜையை தவிர்த்து, இரண்டு தையல் இயந்திரங்களும் ஒரு டேபிள் ஃபேனும் குடிலின் மிச்ச இடத்தை நிரப்பியிருக்கின்றன. நடப்பதற்குக் கூட இடமில்லை. தரையில் பால் காய்ச்சவென ஒரு சிறு கேஸ் ஸ்டவ் வைத்திருக்கிறார். ஹர்ஜீத் அல்லது மோகினியிடம் பேச ஒரே ஒருவரால் மட்டும்தான் உள்ளே நுழைய முடியும். அந்த அளவுக்குதான் இடம் இருந்தது. வாடிக்கையாளர்களான விவசாயிகளும் போராட்டக் களத்தின் பிற மக்களும் வாசலிலேயேதான் நிற்கிறார்கள்.







