மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நவிஸ் ஜூன் 6ஆம் தேதி விவசாயக் கடன் தள்ளுபடி என்ற உறுதியை ஊடகத்திற்கு சொன்னபோது, “வரலாற்றில் மிகப்பெரியது” என்றார். ‘தள்ளுபடிக்கான’ தகுதி என்பது அதைவிட பெரிதாக மாறிவிட்டது.
தள்ளுபடிக்கான பல்வேறு நிபந்தனைகளைக் கேட்ட பிறகு, நிவாரணத்திற்காக காத்திருந்த அவுரங்காபாத் மாவட்டம் பருண்டியின் வறட்சியான கிராமத்தைச் சேர்ந்த பப்பாசாஹேப் இர்காலுக்கு சிரிப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை. “இதற்கான [தள்ளுபடிக்கான] உச்சவரம்பு 1.5 லட்சம் ரூபாய்,” என்று கூறியபடி தனது 16 ஏக்கர் நிலத்தில் மனைவி ராதா, தந்தை பானுதாஸ் ஆகியோருடன் சேர்ந்து களை எடுக்கிறார் இந்த 41 வயது விவசாயி. “எனக்கு 9 லட்சம் ரூபாய் கடன்தொகை உள்ளது. நான் 7.5 லட்சத்தை திரும்ப செலுத்தினால்தான் 1.5 லட்சம் ரூபாய் தள்ளுபடிக்கான பலன் கிடைக்கும்.”
வறட்சி ஆண்டுகளில் தொடர்ந்து விளைச்சல் சரிந்ததால் 2012-2015 ஆண்டுகளில் அவர்களின் வங்கிக் கடன் குவிந்துவிட்டதாக சொல்கிறார் ராதா. 2014ஆம் ஆண்டு இக்குடும்பம் தாங்கள் தோண்டிய கிணற்றுடன் அருகில் உள்ள ஏரியை இணைப்பதற்காக நான்கு கிலோமீட்டருக்கு குழாய் அமைத்துள்ளது. “ஆனால் அந்த ஆண்டும் மழை நன்றாக பெய்யவில்லை,” என்கிறார் அவர். “துவரையும், பருத்தியும் முற்றிலுமாக கருகிவிட்டன. தேவையில் உள்ள விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ஃபட்நவிஸ் அறிவித்தபோது, எங்களுக்கு நம்பிக்கை கிடைத்தது. இது எல்லோரையும் ஏமாற்றும் செயல். எங்களால் திரும்ப செலுத்த முடியும் என்றால் முதலில் எங்கள் தலையில் ஏன் கடனை வைத்துக் கொள்ள வேண்டும்?”




