“அக்கா, ஏதாவது செய்யுங்கள், இல்லாவிட்டால் அவர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் கொன்று விடுவார்கள்!” இது தான் நான் முதன்முதலில் சந்தித்தபோது கிரிஜா தேவி உதிர்த்த வார்த்தைகள். “அவர்கள் என்னை அடிக்காமல் இருப்பதற்கு நான் இந்த சிறிய இருட்டு அறையில் என்னை பூட்டிக் கொண்டேன்,” என்று அவர் விம்முகிறார்.
துலக்க வேண்டிய பாத்திரங்கள் அடுக்கப்பட்டுள்ள வீட்டின் குறுகிய பாதையைக் கடந்து, கிரிஜா தன் கணவன் வீட்டாரிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பூட்டிக் கொண்டுள்ள அறையை அடைந்தேன். அறைக்கு வெளியே சமையலறை, அதையடுத்து தாழ்வாரம். அங்கு தான் அவரது கணவரும், குழந்தைகளும் உணவு உண்டு கொண்டிருந்தனர்.
30 வயதாகும் கிரிஜா, 34 வயதாகும் கட்டடத் தொழிலாளியான ஹேம்சந்திரா அஹிர்வாரை 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 14, 11 மற்றும் 6 வயதுகளில் குழந்தைகள் உள்ளனர்.
வேலையை விடச் சொல்லி அவரது கணவர் குடும்பத்தார் மிரட்டியபோது பிரச்சனை தொடங்கியது. வேலையில் சேர்ந்த பிறகு பிரச்சனை பெரிதாகிவிட்டது. உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தின் கப்ராய் தாலுக்காவில் உள்ள பசோரா அவரது சொந்த கிராமம். இங்கு அவர் அங்கீகரிக்கப்பட்ட சமூக நல செயற்பாட்டாளராக (ஆஷா) உள்ளார். ஊரடங்கிற்கு பிறகு அவரது கணவனின் தாய், தந்தை வீடு திரும்பியுள்ளதால் பிரச்சனை பெரிதாகியுள்ளது.
“ஊரடங்கிற்கு முன் இருவரும் [அவரது மாமனார், மாமியார்] டெல்லியில் இருந்தபோது நிலைமை கட்டுக்குள் இருந்தது,” என்கிறார் கிரிஜா. அவர்கள் கூலித்தொழிலாளிகளாக இருந்தனர். “ஊரடங்கு தொடங்கியது முதல், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கிராமத்தில் ஏதேனும் கருவுற்ற பெண்ணைப் பார்க்க நான் சென்றால் பிற ஆண்களை சந்திக்கச் சென்றுள்ளதாக அவர்கள் சொல்வார்கள். ஆஷாவில் இருப்பவருக்கு கருவுற்ற பெண்களைச் சந்திப்பது கடமை.” அவரது ஆறு வயது மகன் யோகேஷ், மொட்டை மாடிக்கு செல்லும் படியில், எங்களைப் பின்தொடர்கிறான்.
கிரிஜா அதிகம் அழுதிருந்தார். அவரது கண்களும் உதடுகளும் வீங்கி இருந்தன. அவரும், ஹேம்சந்திராவும் கூட்டுக் குடும்பமாக உள்ளனர். அவரது இரு மாமாக்கள், அவர்களின் குடும்பத்தினரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். எனினும் தனித்தனி சமையலறை, வசிப்பிடங்கள் உள்ளன. ஆனால் நுழைவாயிலும், முற்றமும் பொதுவானவை.







