1997ம் ஆண்டு.
சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் அணிகள் மோதின. இந்த வருடத்தின் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியின் கடைசி மூன்று இறுதிப் போட்டிகளில் மேற்கு வங்க அணி மணிப்பூரிடம் தோற்றது, ஆனால் அவர்கள் இப்போது மஞ்சள் மற்றும் மெரூன் நிற உடையில் உயர்ந்து நிற்கிறார்கள். மேற்கு வங்க ஹல்டியா நகரில் உள்ள துர்காசாக் மைதானம் கால்பந்து வீரர் பந்தனா பாலுக்கு சொந்த மாநில மைதானம்.
விசில் அடித்து ஆட்டம் தொடங்கியது.
முன்னதாக, 16 வயது ஆட்டக்காரர் சாம்பியன்ஷிப்பின் கால் இறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்திருந்தார். அந்தப் போட்டியில் கோவாவுக்கு எதிராக மேற்கு வங்கம் வென்றது, ஆனால் அது பாலுக்கு இடது கணுக்கால் காயத்தை ஏற்படுத்தியது: “ஆனாலும் நான் அரையிறுதியில் [பஞ்சாப்க்கு எதிராக] விளையாடினேன், ஆனால் நான் வலியில் இருந்தேன். அன்று நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்தபோது, என்னால் நிற்கக் கூட முடியவில்லை.”
மேற்கு வங்கத்தின் இளம் வீரரான பால், சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை பெஞ்சில் இருந்து பார்த்தார். ஆட்டம் முடிய இன்னும் சில நிமிடங்கள் இருந்த நிலையில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. மேற்கு வங்கப் பயிற்சியாளர் சாந்தி மல்லிக் மகிழ்ச்சியடையவில்லை. மேலும், 12,000 இருக்கைகள் கொண்ட ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் மத்தியில் மாநில முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர். மல்லிக் பாலுவைத் தயாராகும்படி கேட்டுக் கொண்டார். “என் நிலையைப் பார்” என்று அவளிடம் சொன்னேன். ஆனால் பயிற்சியாளர், ‘நீ எழுந்து நின்றால் கோல் விழும் என் இதயம் என்னிடம் சொல்கிறது,’ என்றார்” என்கிறார் பால்.
எனவே வலியைக் குறைக்க இரண்டு விரைவான ஊசிகளுக்குப் பிறகு, காயத்தைச் சுற்றி ஒரு பேண்டேஜ் இறுக்கமாகக் கட்டப்பட்டது, பால் தயாராகிக் காத்திருந்தார். ஆட்டம் டிரா ஆனது. கூடுதல் நேரம் கோல்டன் கோலுக்கு விடுக்கப்பட்டது. எந்த அணி முதலில் அடிக்கிறதோ அந்த அணி சாம்பியன்ஷிப்பை வெல்லும்.
“நான் கோல் குறுக்குக் கம்பிகளைக் குறிவைத்தேன், பந்து வலது பக்கம் சுழன்றது. காப்பாளர் குதித்தார். ஆனால் பந்து அவரைக் கடந்து பறந்து வலையில் பாய்ந்து கோலானது.”





















