வித்யாபதி பாதிக்கப்பட்டிருந்த நோயின் அறிவியல் பெயர் ‘விசெரல் லெயஷ்மானியாசிஸ்’ ஆகும். இது பூச்சிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு வகை நோயாகும். இந்த மணல் ஈ கடித்ததனால் அவருக்கு காலா-அசார் நோய் ஏற்பட்டிருக்கிறது. மணல் ஈ கொசுவின் அளவில் மூன்றில் ஒரு பங்கே இருக்ககூடிய உயிரியாகும். மேலும், இவை மோசமான வீடுகள்,ஈரப்பதம்,குளிர்மையான வெப்பநிலை போன்றச் சூழலில் பெருக்கம் அடையக்கூடியது. இந்நோய் எலும்பு மஜ்ஜை,மண்ணீரல் மற்றும் கல்லீரல் ஆகிய உடலுறுப்புகளையே முதலில் பாதிக்கக்கூடியது, இதனைத்தொடர்ந்து சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து வெளிப்படையாகத் தோலில் புண்கள் உண்டாகிறது. அண்மையில் புறக்கணிக்கப்பட்ட நோய்களுக்கான மருந்துகளுக்கான முன்னெடுப்பு என்ற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில், ஆசியக் கண்டத்தில் ‘விசெரல் லெயஷ்மானியாசிஸ்’ நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 5 அல்லது 10 விழுக்காடு நபர்களுக்கு இந்நோயினால் புண்கள் ஏற்படுவதாகவும் கண்டறிந்துள்ளது.
உலகெங்கும் மனிதநேயம் தொடர்பாக இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மருத்துவர்கள் என்ற அமைப்பு கூறுகையில், “உயிரைப் பறிக்கக்கூடிய மிக அபாயகரமான நோயான மலேரியாவிற்கு அடுத்து, பூச்சிகளில் ஏற்படக்கூடிய இரண்டாவது உயிர்க்கொல்லி நோய் கலா-அசார்” என்று கூறியுள்ளது. மேலும், இந்நோயை முழுமையாக ஒழிப்பதற்காகப் பத்து வருடங்களுக்கும் மேலாக, 2010, 2015 மற்றும் 2017 என பல ஆண்டுகள் இந்திய அரசு இலக்காக நிர்ணையித்திருந்தாலும் காலா அசார் நோய் முற்றிலும் ஒழிக்கப்படாமல் நாட்கள் நீண்டு கொண்டேதான் செல்கிறது.
அதேவேளையில், சிகிச்சையளிக்கப்படாத விசெரல் லெயஷ்மானியாசிஸ் நோய் என்பது உயிர்ச்சேதம் விளைவிக்கும் அபாயம் கொண்டது. எனினும், உயிர்ச்சேதம் ஏற்படுத்தாத போது உண்டாகும் தோல் பாதிப்புகளானது(கலா-அசார் டெர்மல் லெயஷ்மானியாசிஸ் அல்லது பிகேடிஎல்) தோலினை கடுமையாக விகாரப்படுத்தக் கூடியது. மேலும்,இதன் காரணமாக ஏற்படக்கூடிய தழும்புகளால் வித்யாபதியைப் போன்று அந்நோயின் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அவமானம் மற்றும் பிறரால் கைவிடப்படுதல் போன்றவற்றால் கூடுதலாக துன்புற நேரிடுகிறது.
“என் முகம் முதலில் கருமை அடைந்தது, அதனைத்தொடர்ந்து எனது தாடையும், பின்னர் எனது கழுத்துப்பகுதியும் கருமை அடைந்தது” என அவர் கூறினார். அவரது தாய்வீடு இருக்கக் கூடிய சரண் மாவட்டமானது பீகார் மாநில அளவில் காலா-அசார் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அதிகளவிலானவர்களைக் கொண்டுள்ள மாவட்டமாகும்.
வித்யாபதியின் கணவர் ராஜு பாகத் கொத்தனார் வேலை செய்து வருகிறார். வேலை கிடைக்கக்கூடிய காலத்தில் பெங்களுருவிற்கு இடம்பெயர்ந்து பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில்,அவருக்கு அவரது பெற்றோர்கள் அழுத்தம் கொடுத்தாலும் கூட வித்யாபதியை விட்டு விலகிச் செல்ல மாட்டேன் என்று வித்யாபதிக்கு உறுதியளித்திருக்கிறார். எனினும், வித்யாபதியை பெங்களுருவுக்கு அழைத்து செல்லாமல், பீகாரில் உள்ள அவளுடைய பெற்றோரின் வீட்டிலேயே இருக்கவேண்டுமென கூறியுள்ளார். மேலும்,அங்கு அழைத்துச் சென்றால் “யார் உன்னைப் பார்த்துக் கொள்வார்கள்? எனவே,நலம் பெறும் வரை உனது தாய்வீட்டில் இரு” என்று அதற்கு காரணமும் கூறியுள்ளார்.
அவர் வீட்டுக்கு வருகின்ற ஒவ்வொரு முறையும், வித்யாபதி உடனே தங்கியுள்ளார். இந்த சந்திப்பின் காரணமாக வித்யாபதி இருமுறை கருத்தரித்துள்ளார். முதல் ஆண்குழந்தை கருவிலேயே இறந்துள்ளது. இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தையும் பிறந்த சில மணிநேரங்களில் இறந்துள்ளது. மிக நிச்சயமாக வித்யாபதி அவரது நோய்க்கு முறையான சிகிச்சைப் பெறாததின் காரணமாகவே இச்சம்பவங்கள் நடந்தேறியுள்ளது.