“எந்தவொரு வழக்கையோ சட்டமுறையையோ மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் அல்லது மத்திய அரசு அதிகாரிக்கும் மாநில அரசு அதிகாரிக்கும் எதிராக நல்லெண்ணத்திலோ உள்நோக்கம் கொண்டோ இச்சட்டத்தின்படி எவரும் தொடுக்க முடியாது.”
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020-ன் 13ம் பிரிவு இதுதான். இந்தச் சட்டம்தான் விளைபொருட்களை சந்தைப்படுத்தும் வாரியத்தின் மண்டிகளை முற்றிலுமாக அழிக்கும் முனைப்பைக் கொண்டிருக்கும் சட்டம்.
புதிய சட்டங்கள் விவசாயிகள் சம்பந்தப்பட்டவை என்றா நினைத்தீர்கள்? அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கும் வாய்ப்பை மறுக்கும் பிற சட்டங்களும் இருக்கின்றன. ஆனால் இந்த சட்டம் அவற்றைக் காட்டிலும் அதிக பிரச்சினையானது. இச்சட்டம் பாதுகாக்கும் நபர்களை நல்லெண்ணத்துடன் செயல்படுபவர்கள் எனக் குறிப்பிடுவது மிகைப்படுத்தப்படும் விஷயம். ‘நல்லெண்ணத்துடன்’ அவர்கள் செய்த ஒரு குற்றத்துக்காக அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடியாது என்பது மட்டுமின்றி, வருங்காலத்தில் அவர்கள் செய்யவிருக்கும் ‘நல்லெண்ண’ குற்றங்களிலிருந்தும் சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
உங்களுக்கு புரியவில்லை எனில், விஷயம் இதுதான். உங்களுக்கென சட்ட உதவி பெறும் உரிமை இச்சட்டத்தில் இல்லை. சட்டத்தின் 15ம் பிரிவு,
”எந்த நீதிமன்றத்துக்கும் இச்சட்டத்தின் சார்பாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகளை தொடுக்கவோ கையாளவோ அதிகாரம் கிடையாது” எனக் குறிப்பிடுகிறது.
’நல்லெண்ண’ அடிப்படையில் நடந்து கொள்ளும் ‘எந்தவொரு நபர்’ என்கிற அந்த நபர் யார்? சட்டம் பாய முடியாத அந்த மனிதர் யாராக இருப்பார்? விடைக்கான சிறு குறிப்பு: விவசாயிகள் இடும் கோஷங்களில் இடம்பெற்றிருக்கும் கார்ப்பரெட் பகாசுரர்களின் பெயர்களை கவனித்துப் பாருங்கள். அவர்களின் வேலைகளை சுலபமாக்கி விடத்தான் இப்படியொரு விஷயம் நடத்தப்பட்டிருக்கிறது.
“எந்த வழக்கும் எந்த சட்டமுறையும் தொடுக்க முடியாது….” வழக்கு தொடுக்க முடியாதவர்கள் விவசாயிகள் மட்டும் அல்ல. யாருமே தொடுக்க முடியாது. பொது நல வழக்குக்கும் இது பொருந்தும். தொண்டு நிறுவனங்களோ விவசாயச் சங்கங்களோ எந்தவொரு தனி நபரோ ( நல்லெண்ணம் கொண்டோரோ கெட்டெண்ணம் கொண்டோரோ) என யாராலும் தலையிட முடியாது.
1975-77 வரை இருந்த நெருக்கடி நிலை காலத்துக்குப் பிறகு (அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட காலம்) குடிமகனுக்கான சட்ட உரிமை முற்றிலுமாக மறுக்கப்படுவது நிச்சயமாக இப்போதுதான்.







