தானே மாவட்டம், ஷஹப்பூர் தாலுக்காவில் புறநகரில் உள்ள டல்கான் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு மார்ச் 27ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு ஹிரா முகானி வந்தார். ஹிரா அவரது மகன் மனோஜ், மருமகள் ஷாலு ஆகியோர் சிறிது நேரம் கூட ஓய்வெடுக்காமல் 104 கிலோமீட்டர் நடந்தே வந்துள்ளனர். பல்கார் மாவட்டம், தஹானு தாலுக்காவில் உள்ள கஞ்ஜத் கிராமம் அருகே செங்கல்சூளையில் அவர்கள் வேலை செய்துவந்தனர்.
“போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாததால் நாள் முழுவதும் நடந்தோம். எப்போதும் கஞ்ஜதிலிருந்து ஷஹாபூருக்கு அரசுப் பேருந்துகள் இருக்கும்,” என்கிறார் 45 வயதாகும் ஹிரா. மார்ச் 26ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு துணி மூட்டைகள், பாத்திரங்களை சாக்கில் கட்டி தலையில் சுமந்தபடி ஹிராவும், ஷாலுவும் நடக்கத் தொடங்கினர். 12 கிலோ அரிசி மூட்டையை தலையிலும், 8 கிலோ கேழ்வரகு மாவை கையிலும் பிடித்துக் கொண்டு மனோஜ் 21 மணி நேர பயணத்தை தொடங்கியுள்ளார். “அரசுப் பேருந்து எப்போதுமே நேரத்திற்கு வராது என்பதால் நாங்கள் நீண்ட தூரம் நடந்து பழகிவிட்டோம். இதனால் எங்கள் கால்கள் வலிக்கவில்லை. ஆனால் வருமானம் கிடைக்காமல் போனது தான் வருத்தமளிக்கிறது,” என்கிறார் அவர்.
செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக ஹிரா, அவரது 27 வயது மகன் மனோஜ், 25 வயது ஷாலு ஆகியோர் மார்ச் 2ஆம் தேதி வீட்டைவிட்டுச் சென்றனர். இந்தாண்டு மே மாதம் திரும்புவதற்கு அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நாடுதழுவிய பொதுமுடக்கம் அவர்களின் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டது. “மார்ச் முதல் மே மாதம் வரை குறைந்தது ரூ.50,000 சம்பாதிக்கலாம் என நாங்கள் திட்டமிட்டிருந்தோம்,” என்று ஹிரா என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். “சூளை உரிமையாளர் வேலைகளை நிறுத்திவிட்டு எங்களை திரும்பிப் போகச் சொல்லிவிட்டார். மூன்று வாரங்களுக்கு அவர் ரூ.8000 தான் கொடுத்தார்.”
எதிர்பாராத விதமாக, மார்ச் இறுதியில் மூவரும் டால்கன் திரும்பியதை கண்டு ஹிராவின் கணவரான 52 வயதாகும் வித்தலும், 15 வயதாகும் அவரது மகள் சங்கீதாவும் அதிர்ச்சியடைந்தனர் - அவர்களின் வருகை குறித்து தொலைபேசியில் ஹிராவினால் தெரிவிக்க முடியவில்லை. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள வித்தலால் உடலுழைப்பு எதுவும் செலுத்த முடியாது என்பதால் மற்றவர்கள் கஞ்ஜத் சென்ற நிலையில், அவர் சங்கீதாவுடன் கிராமத்தில் இருந்துவிட்டார்.
2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் குடும்பத்திற்கு இரவு உணவு சமைப்பதற்காக பண்ணையில் காய்கறிகளை பறித்துக் கொண்டிருந்தபோது டால்கனில் ஹிராவை நான் சந்தித்தேன். அவர் மகாராஷ்டிராவின் பாதுகாக்கப்பட வேண்டிய பழங்குடியின சமூகமான கட்கரி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.






