“ஊரடங்கிலும் எங்களுக்கு பெரிய நெருக்கடி தான். கோவிட்-19 கணக்கெடுப்புடன், ஏப்ரல் முதல் ஜூலை மாதங்களில் 27 குழந்தைப் பேறுகளை கையாண்டுள்ளேன். தாயின் பரிசோதனை முதல் ஆரம்ப சுகாதார மையத்திற்கு பிரசவத்திற்காக அழைத்துச் செல்வது வரை, அனைத்தையும் நான் செய்துள்ளேன்,” என்கிறார் ஒஸ்மானாபாத் மாவட்டம் நிலிகான் கிராமத்தின் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளரான ஆஷா பணியாளர் தனுஜா வகோலி.
மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அறிவித்த பிறகு, தனுஜா வீட்டு வேலைகளை முடித்து, தனது கணவன், இரண்டு மகன்களுக்கு சமையல் செய்து முடித்து, அன்றாட பணியைச் செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கு (முன்பெல்லாம் 7.30 மணிக்கு எழுவார்) எழுந்து விடுகிறார். “7.30 மணிக்கு பணியை தொடங்காவிட்டால், யாரையும் சந்திக்க முடியாது. எங்களது அறிவுரைகளை தவிர்ப்பதற்காகவே சிலர் காலையில் சீக்கிரமே வீட்டைவிட்டுச் சென்று விடுகின்றனர்,” என்கிறார் அவர்.
ஆஷாவில் மாதத்தில் 15-20 நாட்கள் வேலை நாட்களில் 3-4 மணி நேரங்கள் தான் வேலை இருக்கும். 2010ஆம் ஆண்டு முதல் ஆஷாவில் பணியாற்றும் 40 வயதாகும் தனுஜா, அன்றாடம் ஆறு மணி நேரம் இப்போது வேலை செய்கிறார்.
துல்ஜாபூர் தாலுக்காவின் நிலேகான் கிராமத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி கோவிட்-19 கணக்கெடுப்பு பணி தொடங்கியது. ஆஷா பணியாளர்களான தனுஜா மற்றும் அல்கா முலே ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து தங்கள் கிராமத்தில் உள்ள 30-35 வீடுகளுக்கு தினமும் செல்கின்றனர். “காய்ச்சல் அல்லது வேறு ஏதேனும் கரோனா அறிகுறி உள்ளதா என வீடு வீடாக சென்று அறிய வேண்டும்,” என்கிறார் அவர். யாருக்காவது காய்ச்சல் இருந்தால் பாராசிடமால் மாத்திரைகளை கொடுப்போம். கரோனா வைரஸ் அறிகுறி இருந்தால், 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்தூர் கிராம ஆரம்ப சுகாதார மையத்திற்கு தகவல் கொடுப்போம். (ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து யாரேனும் அக்கிராமத்திற்கு வந்து கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரிப்பார்கள்; பரிசோதனையில் நோயிருப்பது உறுதியானால், துல்ஜாபூரில் உள்ள கிராமப்புற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பார்கள்.)
கிராமத்தின் அனைத்து வீடுகளுக்கும் சென்று திரும்ப ஆஷா பணியாளர்களுக்கு முன்னிரவு ஆகிவிடுகிறது - பிறகு மீண்டும் அடுத்தநாள் வேலையை தொடங்க வேண்டும். நிலேகானின் சுற்றுவட்டாரத்தில் இரண்டு டான்டாக்கள் உள்ளன - முன்பு இப்பகுதி பழங்குடி நாடோடி சமூகமான லாமனின் பகுதியாக இருந்தது. டான்டாக்கள் மற்றும் கிராமத்தின் மத்தியில் சுமார் 3000 மக்கள்தொகை இருக்கக்கூடும் என்கிறார் தனுஜா. (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் நிலேகானில் 452 வீடுகள் இருப்பதாக தெரிகிறது.)












