ஒரே கும்மிருட்டாக இருந்தது; ஆனால், அவரால் சூரிய உதயத்துக்காக காத்திருக்க முடியவில்லை. அப்போது ஜாமம் 2 மணி இருக்கும். அடுத்த மூன்று மணி நேரத்தில், அவரைத் தடுத்துநிறுத்துவதற்காக அங்கு போலீசார் வந்துவிடுவார்கள். கசருப்பு தனராஜுவும் அவருடைய இரண்டு சகாக்களும் சிறுதுநேரத்தில் போலீசின் தடுப்பு வரக்கூடிய இடத்தைக் கடந்துவிட்டார்கள். சிறிது நேரத்திற்குள் அவர்கள் கடலுக்குள் போய்விட்டனர்; விடுதலை அடைந்தவர்களாக உணர்ந்தனர்.
"ஆரம்பத்தில் போக நான் ரொம்பவும் பயந்தேன்." என்ற தனராஜு, ஏப்ரல் 10 அன்று தப்பித்ததைப் பற்றிச் சொல்கிறார். " இருக்கிற துணிவை எல்லாம் திரட்டவேண்டியிருந்தது. பணமும் தேவைப்பட்டது. வீட்டு வாடகை தரவேண்டுமே.” என்கிற தனராஜும்(44) அவரின் சகாக்களுமாக ஒரு முடிவோடு இருந்த மீனவர்கள் - வெளிப்புற மோட்டார் கொண்ட அவரின் சிறிய படகில் கடலுக்குள் சென்றனர். பொதுமுடக்கம் காரணமாக படகுத் துறையில் மீன்பிடித்தலோ அதுசார்ந்த வேறு செயல்பாடுகளோ கூடாதென தடைசெய்யப்பட்டன. ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணியளவில், விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தின் இரண்டு வாயில்களுக்கும் போலீசார் வந்துவிடுவார்கள். இங்குள்ள சந்தையில் பொதுமக்களுக்கும் மீனவர்களுக்கும் அனுமதி இல்லை.
சூரிய உதயத்துக்கு முன்னதாகவே 6 - 7 கிகி பங்காரு தீகா (சாதா கெண்டை) மீன்களுடன் திரும்பினார், தனராஜு. “ சிறிது நேரத்தில் நடந்துவிட்டது.” என்றார். “கடைக்குத் திரும்பிய சில நிமிடங்களில் போலீசு அங்கு வந்துவிட்டது. அவர்கள் என்னைப் பிடித்திருந்தார்கள் என்றால், அடித்திருப்பார்கள். துணிச்சலான நேரத்தில், தப்பிப்பிழைப்பதற்கு நம்மால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்தாகவேண்டும். இன்று, நான் வீட்டு வாடகை தந்துவிடுவேன். ஆனால், நாளை எதுவும் நேரலாம். எனக்கு கோவிட் -19 நோய் தொற்றி பாதிப்பு வரவில்லை. ஆனால் இது எனக்கு பண பாதிப்பு ஏற்படுத்துகிறது.” என்கிறார், தனராஜு.
செங்கல்ராவ் பேட்டாவில் உள்ள டாக்டர் என்.டி.ஆர் கடற்கரைச் சாலையின் பின்னால் ஒரு குறுகிய தெருவில், ஒரு தற்காலிக கடையில், அவர் மீன்களை விற்றார். அந்தக் கடையானது, பழைய துருப்பிடித்த ரோமா மிதிவண்டியில் ஒரு பலகையை வைத்து அமைக்கப்பட்டு இருந்தது. போலீசின் பார்வையில் படாதபடி, கமுக்கமாக அவர் மீன் விற்றார். " முதன்மைச் சாலைக்கு மிதிவண்டியைக் கொண்டுசெல்ல எனக்கு விருப்பம்தான். ஆனால் போலீசுக்கு அஞ்சி போகவில்லை." என்கிறார் தனராஜு. வழக்கமாக ஒரு கிகி மீனை ரூ. 250-க்கு விற்கும் அவரால், 100 ரூபாய்க்குதான் விற்கமுடிந்தது.
சாதாரண சூழலில் 6 -7 கிலோ கெண்டை மீன்களை தனராஜு விற்பாரேயானால் , அவருக்கு ரூ. 1,500 முதல் ரூ. 1,750வரை கிடைக்கும். அவருடைய மிதிவண்டி மீன்கடையானது, வாங்குவோரின் கவனத்தை ஈர்க்கவில்லை. பிடித்துவந்த மீன்களை அவர் இரண்டு நாள்களில் விற்கமுடியும். அதன் மூலம் கிட்டத்தட்ட 750 ரூபாய் கிடைக்கும். இவருக்கு மீன்களை அறுத்து சுத்தம்செய்து தரும் 46 வயது பப்புதேவியும் உதவியாக இருந்தார். ஒருவருக்கு மீனை அறுத்து சுத்தம்செய்து தந்தால் அவருக்கு வாங்குவோர் 10 - 20 ரூபாய் தருவார்கள். அவரும் தனராஜுவுடன் இதைச் செய்தார். வேறென்ன, பணத்துக்காக சவாலை எதிர்கொண்டார்.










