ஆனந்த் விகார் ரயில் நிலையத்தின் கூட்டத்தில் சோனு குமார் ராவத் மற்றும் அவரின் குடும்பம் அமைதியான இடத்தை கண்டறிந்தனர். அவர்களை சுற்றி பயணிகளும் வியாபாரிகளும் இயங்கிக் கொண்டிருந்தனர். ரயில்கள் வந்து சென்று கொண்டிருந்தன. 27 வயதாகும் அவர் உடைமைகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறார். அவரின் மனைவியான சிதாரா காதூன் குழந்தையை கையில் பிடித்திருந்தார். பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆகியிருந்தது. பிகாருக்கு செல்லும் லிட்சாவி எக்ஸ்பிரஸ் வருவதற்காக நெரிசலான நடைமேடையில் தகிக்கும் சூட்டில் நான்கு மணி நேரம் அவர்கள் காத்திருக்க வேண்டும்.
சோனும் ஒரு மேஸ்திரி. சிதாரா கட்டுமான தளங்களில் பணிபுரிகிறார். தினசரி வேலைக்காக இருவரும் காஜியாபாத் தொழிலாளர் மண்டிகளின் வரிசையில் காத்திருப்பார்கள். சமீப வாரங்களாக, “தொழிலாளர் பகுதிகளில் நாள் முழுதும் காத்திருந்தோம். இரண்டு, மூன்று நாட்களாக எந்த வேலையும் கிடைக்கவில்லை,” என்கிறார் சோனு.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் போர் தொடுத்திருப்பதாலும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாலும் நாடு முழுக்க அதிகரித்திருக்கும் எரிவாயு சிலிண்டர்களின் விலையால், டெல்லியில் வாழ்வதற்கான பொருளாதார நிலை ராவத் குடும்பத்துக்கு இல்லை.
“தொடக்கத்தில் சிலிண்டருக்கு 1,200 ரூபாயும் வாடகைக்கு 2,500 ரூபாயும் மின்சாரத்துக்கு 500 ரூபாயும் நாங்கள் செலவழித்தோம். அவையே மாதத்துக்கு 4,000 அல்லது 5,000 ரூபாய் ஆகிவிடும். சாப்பாடு செலவு தனி,” என்கிறார் சோனு. அடிப்படை வசதிகளுக்கு செலவு செய்ய பணம் இல்லாத அவர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்புதவைத் தாண்டி வேறு வழியில்லை.
ஆனால் அவர்கள் திரும்புவது பெரும் அளவில் பதட்டத்தை அவர்களுக்குக் கொடுத்திருந்தது. இரு வேறு மதங்களை சேர்ந்த அவர்கள் ஊரை விட்டு வெளியே சென்று மணம் முடித்தவர்கள். டெல்லிக்கு வேலையும் புது அடையாளத்தையும் தேடி அவர்கள் வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. இப்போது அவர்கள் திரும்ப வேண்டும். ஓரளவுக்கு பிரச்சினை குறைவாக இருக்க, சிவான் மாவட்டத்தின் மைர்வாவிலுள்ள சிதாராவின் வீட்டுக்கு சென்று பார்க்கவுள்ளார்கள்.
டெல்லியில் அக்குடும்பம், கனவானி கிராமத்து குப்பம் ஒன்றில் ஓரறை வீட்டில் வசிக்கிறது. “மாதத்தில் 20 நாட்களுக்கு வேலை இருக்கும்,” என்கிறார் சோனு. “வேலைகள் தொடர்ந்து கிடைத்தால், மாதத்துக்கு 10,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்,” என பெருமூச்செறியும் அவர், குடும்பப் பொருளாதாரத்தை எரிவாயு சிலிண்டருக்கான நெருக்கடி எப்படி குலைத்தது என விவரிக்கிறார்.






