மாய் மாதம் முடிவுற்றதும் ஷிம்கா விழாவுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருப்போம். வார்லி மொழியில் சைத், வைஷாக், ஜெத், ஆகார், ஷ்ராவன், பாத்வா, அஷ்வின், கார்திக், மகாஷீர், பூஸ், மாய் மற்றும் ஃபால்குன் (ஷிம்கா என்றும் குறிப்பிடப்படுகிறது) என பன்னிரெண்டு மாதங்கள் இருக்கின்றன.
ஷிம்கா நாளுக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு, விறகுகளை சேகரித்து, நிறுத்தி வைத்து, ஹோலி எனப்படும் சிறு அளவிலான நெருப்புகளை மூட்டுவோம். முழு இரவும் ஆட்ய பாட்யா போன்ற விளையாட்டுகளை விளையாடி கழிப்போம். ஃபால்குன்னின் பதினைந்தாம் நாளான பெளர்ணமி இரவில் கூடி, சுள்ளிகளையும் விறகுகளையும் வைத்து பெரிய நெருப்பு மூட்டுவோம். ஆண்கள் மட்டும்தான் இந்த சடங்கில் பங்குபெறுவார்கள். இலைகளுடனான ஒரு நீண்ட மூங்கிலை காட்டிலிருந்து கொண்டு வருவோம். பூக்கள், மற்றும் கற்கண்டுகள் கொண்ட பூமாலையான காதி மற்றும் அரிசி வெடிகள் மூங்கிலில் கட்டப்படும்.
முன்பெல்லாம் கிராமம் மற்றும் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் பொதுவாக நெருப்பு மூட்டி, விழாவை ஒன்றாக சேர்ந்து கொண்டாடினர். ஷிம்காவுக்கு முன் மணம் முடித்தோர் வந்து அதை ஐந்து முறை சுற்றி சென்று வணங்குவார்கள். உண்மையான விழாக்கோலம் இரவில்தான் பெரியளவில் உருவாகும். எல்லா வயது ஆண்களும் பெண்களும் கேலி பேசிக் கொண்டும், நகைச்சுவை செய்து கொண்டும் ஒருவரை ஒருவர் ஈர்த்துக் கொண்டும் இரவு முழுவதையும் கழிப்பார்கள். இப்படித்தான் நாங்கள் கொண்டாடுவோம். சிறு குழந்தைகள் வெவ்வேறு உடைகளில் வீடு வீடாக சென்று நகைச்சுவை செய்வார்கள். பதிலுக்கு அவர்கள் பரிசு அல்லது பணத்தை கேட்பார்கள். ஷிம்கா விழா, அனைவருக்கும் சந்தோஷத்தையும் சிரிப்பையும் வழங்கும்.





