"கடந்த காலத்தில், எங்கள் வாழ்க்கை வெறும் நாடகம் மட்டுமே. எதையும் சம்பாதிப்பதற்காக, கிராமம் கிராமமாக சென்று நகரந்தோறும் சென்று எங்கள் நந்தியை (சிவபெருமானின் வாகனமாகக் கருதப்படும் ஒரு காளை) கொண்டு மக்களை மகிழ்விக்க வேண்டும். எங்களுக்கு என்று சொந்தமாக வீடோ நிலமோ கிடையாது. நாங்கள் இடம் பெயர்ந்த வண்ணம் இருந்ததால், எங்கள் குழந்தைகளால் கல்வி கற்க இயலவில்லை.
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள திர்மலி நந்திவாலே நாடோடி பழங்குடியினரின் புரா கைக்வாட் இவ்வாறு கூறுகிறார். அவரும் இந்த பழங்குடிக் குழுவைச் சேர்ந்த சுமார் 300 பேரும் பீட் நகரத்திலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஷ்டி தாலுகாவில் உள்ள கனடி புத்ருக் கிராமத்தில் வசிக்கின்றனர். அவர்களின் இடம்(பஸ்தி), கிராமத்தின் புறநகரில் ஒரு சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
"நாடோடியாக அலைவதை விட்டுவிட்டு, 25 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த தரிசு நிலத்தில் தங்கி விவசாயத்தைத் தொடங்க முடிவு செய்தோம்," என்கிறார் கைக்வாட். ஆனால் ஒரே இடத்தில் குடியமர்வது முன்னாள் நாடோடிகளுக்கு எளிதானது அல்ல. அதற்கு முதல் காரணம், ஏறக்குறைய 3,200 பேர் கொண்ட அருகாமை கிராமத்தின் உயர் சாதியினர் குடியமர்ந்த புதியவர்களை வெறுத்தனர். அப்பகுதியில் உள்ள ஆதிவாசி மற்றும் தலித் உரிமை ஆர்வலர்களின் உதவியுடன், நந்திவாலே மக்களின் சார்பில் அஸ்தி காவல் நிலையத்தில் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறுதியில், எதிர்க் குழுக்கள் இணக்கமாக பிரச்சினையை முடித்துக் கொள்ள முன்வந்ததால், வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் பின்னர் மற்றொரு சிக்கல் எழுந்தது. "எங்களுக்கு விவசாயத்தில் அனுபவம் கிடையாது," என்று கைக்வாட் கூறுகிறார். "எனவே நாங்கள் அதை மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடிவு செய்தோம். ஒருநாள் எங்களில் சிலர் எங்கள் அண்டை வீட்டாரான தலித் கிராம மக்களிடம் விவசாயத்தைப் பற்றி எங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிக் கொண்டோம். அவர்களும் உண்மையில் அடக்கமாகவும், கனிவாகவும், எங்களுக்குக் கற்பிக்கத் தயாராக இருந்தனர். வேளாண் கருவிகள் மற்றும் நுட்பங்களுடன் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பணி தொடங்கியது. கடின உழைப்பாலும் முயற்சியாலும் நாங்கள் அதைக் கற்றுக்கொண்டோம். பெண்களும் ஆண்களுமாக எங்கள் முழு சமூகமும், தரிசு நிலத்தை பசுமையான நிலமாக மாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்தது. எங்கள் மக்களில் சிலர் இப்போது விவசாயத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் நாங்கள் ஒரு இயல்பான கிராமப்புற கலாச்சாரத்தை வளர்த்துள்ளோம்.





