எனக்கு அந்தி நேரத்தில் பெயர் சூட்டினர்- அப்போது பொழுது சாய்ந்து இருண்டது. எனது கருப்பு நிறத்திற்கு ஏற்ப ‘சந்தியா‘ [மாலை] என குடும்பத்தினர் பெயர் வைத்துவிட்டனர்.
நான் கருப்பாக இருப்பதால் குடும்பத்தினர் என் மீது அன்பு செலுத்தவில்லை. குழந்தைப் பருவ அனுபவத்தின் மூலம் நிற பாகுபாட்டை நான் அறிந்து கொண்டேன். அது என் மனதைவிட்டு நீங்கவில்லை.
நான் ஜார்கண்டின் சங்காரி கிராமத்தில் முண்டா பழங்குடியின குடும்பத்தில் 1996 ஆம் ஆண்டு பிறந்தேன். என் தாய் நிர்மலா கெர்கெட்டா. என் தந்தை சுமன் லக்ரா. எங்கள் சத்ரா மாவட்டம் வனங்கள், ஆறுகள், நீரோடைகளால் சூழ்ந்துள்ளது. அது ஜார்கண்ட், பீகார் எல்லையில் அமைந்துள்ளது.
என் பெற்றோர் விவசாயிகள்- எங்கள் இரண்டு ஏக்கர் நிலத்தில் வெண்டை, பீன்ஸ், உருளைக் கிழங்கு, காளிஃபிளவர், கேரட் என பருவத்திற்கு ஏற்ப பயிரிடுவோம். நாங்கள் நெல் சாகுபடியும் செய்வோம். ஆனால் இவற்றில் சொற்ப வருமானமே கிடைக்கிறது- என் தந்தையின் விவசாய கூலி வேலை, சாலை கட்டமைப்பு, கிணறு தோண்டுதல் போன்ற தினக்கூலி வேலைகளில் கிடைக்கும் வருமானத்தையும் சேர்த்தால் கூட எங்களின் மொத்த ஆண்டு வருமானம் சுமார் 30,000 ரூபாய் இருக்கும்.
இலுப்பையில் [மதுகா லாங்ஃபோலியா வர். லதிஃபோலியா] சாராயம் தயாரித்து என் பெற்றோர் விற்றனர்- அந்த பணத்தில் ஆறு பேர் கொண்ட எங்கள் குடும்பம் வயிறாறியது- எனக்கு இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன். எங்கள் கல்வி செலவுக்காக கிராமத்தில் அவர்கள் சின்ன இனிப்புக் கடை ஒன்றை வைத்தனர்.
15 பேர் கொண்ட பெரிய குடும்பம் என்றால் வேலைகளும் அதிகம். நான் வளர வளர வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய பழகிக் கொண்டேன். 7 வயதில் 2ஆம் வகுப்பு படிக்கும் போதே நான் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய தொடங்கிவிட்டேன். முழு குடும்பத்திற்கும் சமைப்பது, பாத்திரங்களை துலக்குவது, வீட்டை சுத்தம் செய்வது, தொழுவத்தை கழுவுவது, பசுக்கள், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது, காட்டில் விறகு சேகரிப்பது இன்னும் பல.


















