“ரயில் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறைதான் நிற்கும். கூட்டத்துக்கு நடுவே முண்டியடித்துக் கொண்டு நாங்கள் ரயிலில் ஏறுவோம். சில நேரங்களில் ரயில் நகரத் தொடங்கிவிடும். சில மூட்டைகளை பிளாட்ஃபார்மிலேயே விட்டுவிட்டு செல்ல வேண்டியிருக்கும்.” சாரங்கா ராஜ்போய் கயிறு செய்பவர். பிளாட்ஃபார்மில் அவர் விட்டுவிட்டு செல்ல வேண்டியிருந்த மூட்டைகள், அவரைப் போன்ற பெண்கள் விற்பதற்கான கயிறுகள் செய்யத் தேவைப்படும் ஜவுளி ஆலையின் மிச்ச இழைகள். பசுக்களையும் மாடுகளையும் கட்டவும் ட்ரக்குகள் மற்றும் டிராக்டர்களில் சரக்கு ஏற்றவும் துணி காயப்போடக் கூட கயிறுகள் தேவைப்படும்.
“நாங்கள் செய்வது குடும்பத் தொழில்,” என்கிறார் சாந்த்ரா ராஜ்போய். அகமதாபாத்தின் வத்வாவில் இருக்கும் வீட்டுக்கருகே இருக்கும் திறந்த வெளியில் அமர்ந்திருக்கும் அவர், குவிந்து கிடக்கும் சிந்தடிக் இழைகளிலிருந்து முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறார்.
சாரங்காவும் சாந்த்ராவும் குஜராத்தின் நாடோடி சமூகமான ராஜ்போய் சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அகமதாபாத்திலிருந்து சூரத்துக்கு பயணித்து ஜவுளி ஆலைகளிலிருந்து கழிக்கப்படும் மிச்ச இழைகளை வாங்குவார்கள். அவற்றை அவர்கள் கயிறாக மாற்றுவார்கள். இந்த வேலைக்காக இரவு 11 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் அவர்கள் அடுத்த நாள் இரவு 7 மணிக்குதான் வீடு திரும்புகிறார்கள். குழந்தைகளை பக்கத்து வீட்டாரிடமும் உறவினர்களிடமும் விட்டுச் செல்கின்றனர்.
அவர்கள் ஏறும் ரயில்கள், சமயங்களில் அதிகாலை ஒன்று அல்லது இரண்டு மணிக்கு கூட சென்று சேரும். எனவே கயிறுகள் செய்யும் அப்பெண்கள், ரயில் பிளாட்பாரங்களில் படுத்து தூங்குவார்கள். பாலியல் ரீதியாக அச்சுறுத்தப்படுவதுமுண்டு. “காவல் நிலையத்துக்கு நாங்கள் கொண்டு செல்லப்பட்டு, இரண்டு-மூன்று மணி நேரங்கள் கேள்வி எங்களிடம் கேள்வி கேட்பார்கள். ஏழைகளைத்தான் காவலர்கள் பிடிப்பார்கள்,” என்கிறார் கருணா. “சிறையில் அடைக்க வேண்டுமென அவர்கள் விரும்பினால், அதையும் செய்வார்கள்.”
கருணாவும் சாந்த்ராவும் சாரங்காவும் வத்வாவில் இருக்கும் சார் மலியா நகராட்சி குடியிருப்பில் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள். குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் அங்கு இல்லை என்கின்றனர். பெரும் போராட்டத்துக்கு பிறகுதான் மின்சார இணைப்புகளே கிடைத்தன.


























