“குந்தர் நாயக் வீட்டில் இருக்கிறாரா?” பக்கத்து வீட்டின் முற்றத்தில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த பெண்மணியிடம் கேட்டேன்.
“யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?” கேள்விகள் வந்து விழுந்தன.
நான் காரியாரைச் சேர்ந்த ஒரு பத்திரிகை நிருபர். இதற்கு முன் குந்தரைப் பற்றி பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். இப்போது அவர் எப்படியிருக்கிறார் என்று தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று விளக்கமளித்தேன்.
அவர் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, “நீங்கள் தாகூர்ஜி தானே?“ என்று கேட்டார். ஆமாம் என்றேன், இத்தனை வருடங்கள் கழித்தும் என்னை அடையாளம் கண்டுபிடித்துவிட்டாரே என்ற சந்தோஷத்தில்.
நான் 1996 – 97 ஆண்டுகளில் பல முறை ஒடிசாவின் போலாங்கிர் (பலாங்கிர் என்றும் எழுதப்படும்) மாவட்டத்தில் பாங்கோமுண்டா பிளாக்கில் உள்ள பர்லாபஹேலி கிராமத்திற்குச் சென்றிருக்கிறேன். இப்போது இருபது வருடங்கள் கழித்து மீண்டும் வந்திருக்கிறேன்.
1996 ஆம் ஆண்டு மேற்கு ஒடிசாவின் போலாங்கிர், நுவாபாடா மற்றும் பிற மாவட்டங்களில் உருவான கடுமையான வறட்சி காரணமாக பஞ்சமும் பட்டினியும் நிலவியது. இதனால் இங்கிருந்து மக்கள் வெளியேறத் துவங்கினார்கள். பலர் ஆந்திராவின் செங்கல் சூளைகளுக்கு கூலித் தொழிலாளர்களாக புலம் பெயர்ந்தனர். வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இப்பிரதேசங்களில் இது போன்ற நிகழ்வுகள் புதிது அல்ல. இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வரும் வறட்சி இத்தகைய நிலைமைகளை உருவாக்கிவிடும்.






