சரிகாவும், தயானந்த் சத்புதேவும் ஓராண்டிற்கு முன், 2017 மே மாதம் தயக்கத்துடன் வீடு மாற்றினர். "இது பாதுகாப்பின்மை, அச்சம் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு", என்று 44 வயதாகும் தயானந்த் கூறுகிறார்
மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள மொகர்கா கிராமத்தில் தலித் சமூகத்தினர் 2017 ஏப்ரல் 30 அன்று அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாடினர். "ஆண்டுதோறும் பாபாசாகேப்பின் பிறந்த நாளுக்கு [ஏப்ரல் 14 அன்று] சில நாட்கள் கழித்து இதை கொண்டாட ஒரு நிகழ்ச்சியை நாங்கள் நடத்துகிறோம்," என்று தயானந்த் கூறுகிறார்
மொகர்கா கிராமத்தில் சுமார் 2600 பேர் வசிக்கின்றனர் - பெரும்பான்மையானவர்கள் மராத்தியர்கள், சுமார் 400 தலித்துகளில் பெரும்பாலானோர் மகர் மற்றும் மாதாங் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். மராட்டியர்கள் கிராமத்தின் மையப்பகுதியிலும், தலித்துகள் புறநகர்ப் பகுதியிலும் வசிக்கின்றனர். ஒரு சில தலித் குடும்பங்களுக்கு மட்டுமே சிறிய நிலம் உள்ளது. பலர் மராட்டிய விவசாயிகளின் பண்ணைகளில் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். அவர்கள் இங்கு முக்கியமாக சோளம், துவரம் பருப்பு மற்றும் சோயாபீன் பயிரிடுகின்றனர். சிலர் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிலாரி நகரில் தொழிலாளர்கள், தச்சர்கள் மற்றும் சுமை தூக்குபவர்களாக வேலை செய்கின்றனர்.
ஆனால் கடந்தாண்டு விழாவிற்குப் பிறகு நிலைமை மோசமாகிவிட்டது. "திருவிழா முடிந்த மறுநாள் கிராம சபைக் கூட்டம் [பஞ்சாயத்தால்] கூட்டப்பட்டது," என்று தயானந்த் கூறுகிறார். " சிலர் எங்கள் வீடுகளுக்குள் நுழைந்து, எங்களை அச்சுறுத்தி, ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். அடுத்த நாள் காலை நாங்கள் [சுமார் 15 பேர்] சபையை அடைந்தபோது, அவர்கள் எங்களை ஆத்திரமூட்ட 'ஜெய் பவானி, ஜெய் சிவாஜி' கோஷங்களை எழுப்பினர்." இந்த முழக்கங்கள் 17ஆம் நூற்றாண்டின் மராட்டிய ஆட்சியாளர் சத்ரபதி சிவாஜியை புகழ்கின்றன.







