ரேணு தாகூர் தனது வாடிக்கையாளரின் புருவங்களை மெல்லிய நூலைப் பயன்படுத்தி திறம்பட வடிவமைக்கிறார். "கம்லேஹரில் உள்ள அனைத்து கல்லூரி பெண்களுக்கும் நான்தான் புருவங்களை வடிவமைக்கிறேன்," என்று கம்லேஹர் கிராமத்தின் அழகு நிலைய தொழில்முனைவோரான அவர் கூறுகிறார்.
"மேக்கப்பில் இது மிகவும் கடினமான பணி." அவரது வாடிக்கையாளர் ஜோதியின் முகத்தில் ஒரு மெல்லிய அடுக்கைப் பூசுகிறார். அவருடைய கண்களைச் சுற்றி தூரிகையைத் தடவிக் கொடுக்கிறார். "இந்த கிரீம் சருமத்தை மென்மையாக்கும், இதனால் ஒப்பனை பளபளப்பாக இருக்கும்," என்று 32 வயதான அவர் கூறுகிறார்.
ரேணு தனது 21 வயதில் தொடங்கி 11 ஆண்டுகளாக அழகு கலைத் துறையில் இருக்கிறார். ''சிறு வயது முதலே பியூட்டி பார்லர் வேலையை கற்க நினைத்தேன். நான் இந்த துறையை மிகவும் நேசிக்கிறேன். நான் சிறுமியாக இருந்தபோதே இதைக் கற்றுக்கொள்ள விரும்பினேன்.” அவருக்கு 16 வயதாக இருந்தபோது, விடுமுறையைக் கழிக்க அவரது தந்தை பணிபுரிந்த டெல்லிக்குச் சென்றார். அங்கு ரூ.3,000 செலுத்தி ஆறு மாத ஒப்பனை பயிற்சி கற்றுக்கொண்டார். "எனது கிராமத்தில் யாரும் அதைச் செய்யவில்லை என்பதால் நான் பயிற்சி பெற முடிவு செய்தேன்," என்று அழகுக் கலை தொழில்முனைவோரான அவர் கூறுகிறார்.










