குஜ்ஜார் மேய்ப்பரான அப்துல் ரஷீது ஷேக், பொது விநியோகம் தொடங்கி அரசு நிதி பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாதது வரை எல்லா பிரச்சினைகள் குறித்தும் தகவல் அறியும் உரிமை மனுக்கள் அனுப்பி வருகிறார். வருடந்தோறும் 50 செம்மறி மற்றும் 20 ஆடுகள் கொண்ட மந்தையை காஷ்மீரின் இமயமலைக்கு சென்று மேய்த்து விட்டு வரும் 50 வயது மேய்ப்பரான அவர், கடந்த பத்தாண்டுகளில் இரு டஜன் மனுக்களை அனுப்பியிருக்கிறார்.
“தொடக்கத்தில் என்ன திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என அதிகாரிகளுக்கு தெரியவில்லை. நாங்களும் எங்களின் உரிமைகளை உணராமல் இருந்தோம்,” எனச் சுட்டிக் காட்டுகிறார் அப்துல் கொத்தாவுக்கு (மண், கல் மற்றும் மரக்கட்டை கொண்டு கட்டப்பட்ட பாரம்பரிய வீடு) வெளியே நின்று கொண்டு. அவரும் அவரின் குடும்பமும் ஒவ்வொரு கோடைக்காலமும் இங்குதான் இடம்பெயர்ந்து வருவார்கள். பட்காம் மாவட்ட கான்சாகிப் ஒன்றியத்தின் முஜ்பத்ரி கிராமத்திலிருந்து இடம்பெயருவார்கள்.
“தகவல் அறியும் உரிமை மனுக்களை அனுப்புவதால், சட்டங்கள் மற்றும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கிடைக்கும். அதிகாரிகளை கையாளுவது எப்படி என்றும் கற்றுக் கொள்ள முடியும்,” என்கிறார் அப்துல். தொடக்கத்தில் அதிகாரிகளுக்கே தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து தெரியவில்லை. ”திட்டங்கள் மற்றும் நிதி விநியோகம் குறித்து தகவல் அளிக்கக் கேட்கும்போது அவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.”
அமைப்புக்கு சவால் விடும் இத்தகைய நடவடிக்கைகளால் கிராம மக்கள் அச்சுறுத்தப்படும் போக்கு உருவானது. போலியான வழக்குகளை காவல்துறையினர் ஒன்றிய அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு போடுவார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்ட இயக்கத்தில் இப்பகுதியில் முக்கிய பங்காற்றும் விழிப்புணர்வு கொண்ட அப்துல் போன்ற குடிமக்கள் இலக்காக்கப்படுவார்கள்.
“ஊழல் அதிகாரிகள்தான் காரணம். அவர்களின் சொத்துகளை பாருங்கள்,” என்கிறார் அவர், தான் சொல்லும் விஷயத்தை வலியுறுத்த. தகவல் அறியும் உரிமை மனுக்கள் மட்டுமின்றி, முஜ்பத்ரியில் வசிக்கும் ஐம்பது பேருக்கு உணவு வழங்கல் துறை குடும்ப அட்டைகள் அளிக்க வேண்டுமென்ற பிரச்சினையையும் எழுப்பினார்.











