ஷைலேந்திரா பஜ்ரே தனது வயல்கள் குறித்து கவலை கொள்கிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தில் எந்த விவசாயமும் அவர் செய்யவில்லை. “இங்கு ஒரு குப்பை கிடங்கு உள்ளது- அதில் உள்ள நச்சு கழிவுகள் அனைத்தும் நிலத்தடி நீரில் கலக்கின்றன. ஆழ்துளை கிணற்று நீரும் மாசடைந்துள்ளன. அவை நிலத்தையும், பயிர்களையும் சேதப்படுத்துவிடும் என்பதால் நாங்கள் அந்த நீரை பயன்படுத்துவதில்லை,” என்கிறார்.
அவர் குறிப்பிடும் அந்த குப்பை கிடங்கு புனேவிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உருலி தேவாச்சி எனும் கிராமத்தில் உள்ளது. குப்பை குவியல்களை தொலைவிலிருந்து காணும் போது அழகான இயற்கை மலை குன்றுகள் போல் காட்சியளிக்கின்றன. உண்மையில் அவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகள், பள்ளிகள், கடைகளுக்கு அருகே குவிந்துள்ள குப்பைகள்.
புனே நகர கழிவுகளை கொட்டுவதற்காக 1981ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு உருலி தேவாச்சி கிராமத்தில் 43 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. நாளும் பெருகி வரும் கழிவுகளை மேலும் அகற்ற 2003 ஆம் ஆண்டு கூடுதலாக புர்சுங்கி கிராமத்திலும் 120 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டது. இந்த இரு இடங்களிலும் 2014 மார்ச் மாதம் வரை புனே நகராட்சி சுமார் 1100 டன் கழிவுகளை கொட்டியுள்ளது. கிராம மக்களின் தொடர் போராட்டங்களின் எதிரொலியாக 2015ஆம் ஆண்டு 500 டன் என குறைக்கப்பட்டது.
குப்பைகளின் அளவு குறைக்கப்பட்டாலும் காற்று, நீரின் மாசை கட்டுப்படுத்த முடியவில்லை. 2014ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்(NGT) மேற்கு மண்டல அமர்வு முன் வழக்கறிஞர் அசிம் சரோட் கிராம மக்கள் சார்பில் மனு தாக்கல் செய்தார். இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, NGTல் ஆகஸ்ட் 17ஆம் தேதி இறுதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.






