"கடந்த ஆண்டு ஒரே இரவில் எங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது," என்கிறார் மஞ்சுநாத் கவுடா. "விட்டில் பூச்சிகள் பறந்து வந்து எங்கள் பழங்களை நாசம் செய்தன. ஒரு நாள் காலை, பழத்தில் யாரோ பல ஊசிகளை துளைத்தது போல் சிறிய துளைகளை நாங்கள் பார்த்தோம்.” எனவே இந்த ஆண்டு (2023), அவர் எந்த வாய்ப்பையும் எடுக்காமல், கடேனஹள்ளியில் உள்ள தனது இரண்டு ஏக்கர் மாதுளை பழத்தோட்டத்தை சுற்றி ஒரு வலை அமைத்து வருகிறார். இது நோய்கள், பறவைகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பயிரைப் பாதுகாக்கும் என்று 34 வயதான அவர் நம்புகிறார்.
மஞ்சுநாத் ஒவ்வொரு ஆண்டும் மருந்துகள் மற்றும் உரங்களுக்காக ரூ.2.5 லட்சம் முதலீடு செய்கிறார். ஏனெனில் பழம் எளிதில் அழியக்கூடியது என்பதால் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
இந்த வருடாந்திர செலவை சமாளிக்க, அவரும், அவரது மனைவியும் கடந்த ஆண்டு கடன் வாங்கினர். "இந்த ஆண்டு நாங்கள் கொஞ்சம் லாபம் ஈட்டி எல்லாவற்றையும் திருப்பிச் செலுத்துவோம் என்று நம்புகிறோம்," என்று மஞ்சுநாத்துடன் பண்ணையில் வேலை செய்து கொண்டு வீட்டு வேலைகளை நிர்வகிக்கும் அவரது மனைவி பிரியங்கா கூறுகிறார்.
சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோகன் கௌடாவின் பண்ணையில் 400 மாதுளை செடிகள் பாக்டீரியா கருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன (சாந்தோமோனாஸ் ஆக்சோனோபோடிஸ் பி.வி. புனிகே). "இது அனைத்து தாவரங்களுக்கும், ஒரு பண்ணையில் இருந்து மற்றொரு பண்ணைக்கு பரவும்," என்று அவர் கூறுகிறார். இலைகளில் பூஞ்சாணக் கொல்லிகளை தெளிப்பதே இதற்கு ஒரே தீர்வு.













