1990-கள் வரை, இந்தப் பகுதியில் 10 ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள் யாரும் இருக்கவில்லை. புதிய தலைமுறை மெதுவாக முறையான கல்வியைத் தொடரத் தொடங்கியுள்ளது. உதாரணமாக ஒன்றாம் வகுப்பில் 25 வார்லி மாணவர்கள் சேர்ந்தால், சுமார் எட்டு மாணவர்கள் மட்டுமே 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்கள். இடைநிற்றல் விகிதம் மிக அதிகமாக உள்ளது. அந்த எட்டு பேரில் 5-6 பேர் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். 12 ஆம் வகுப்பை எட்டும் போது இன்னும் அதிகமான மாணவர்கள் வெளியேறுகிறார்கள். எனவே இறுதியாக 3-4 மாணவர்கள் மட்டுமே பள்ளியை முடிக்கிறார்கள்.
தாலுகா அளவில் இளங்கலை பட்டப்படிப்பை தொடர முடியும். சுமார் 10 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். ஆனால் இப்பகுதியில் வேறு எதுவும் இல்லை. மாணவர்கள் மேற்கல்விக்காக நாசிக் அல்லது பால்கர் போன்ற நகரங்களுக்கு பயணம் செய்கிறார்கள். இதனால் இந்த தாலுகாவில் சுமார் மூன்று சதவீத மக்கள் மட்டுமே இளங்கலை பட்டம் பெற்றுள்ளனர்.
வார்லி சமூகத்தில், குறிப்பாக கல்வி விகிதம் குறைவாக உள்ளது. அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. கிராமங்களுக்குச் சென்று மக்களுடன் அவர்களின் சொந்த மொழியில் தொடர்புகொள்வதன் மூலம், ஒரு தொடர்பை ஏற்படுத்துவதற்கும் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
இதை ஆவணப்படுத்த உதவிய AROEHAN-ன் ஹேமந்த் ஷிங்கடேவுக்கு பாரி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
நேர்காணல்: மேதா கலே
இந்தக் கட்டுரை பாரியின் அருகி வரும் மொழிகள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது நாட்டின் பாதிக்கப்படக்கூடிய, அருகும் நிலையில் உள்ள மொழிகளை ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வார்லி என்பது இந்தியாவில் குஜராத், டாமன் & டையூ, தாத்ரா & நகர் ஹவேலி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் வார்லி அல்லது வர்லி பழங்குடிகளால் பேசப்படும் ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும். யுனெஸ்கோவின் அட்லஸ் ஆஃப் லாங்குவேஜசில், இந்தியாவில் பாதிக்கப்படக்கூடிய மொழிகளில் ஒன்றாக வர்லியை பட்டியலிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பேசப்படும் வார்லி மொழியை ஆவணப்படுத்துவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
தமிழில்: சவிதா