சோபி சாஹா கடந்த 25 ஆண்டுகளாக காகிதப் பாக்கெட்டுகளை தயாரித்து வருகிறார். "முதலில், நான் ஒரு கத்தியை பயன்படுத்தி காகிதத்தை மூன்று பகுதிகளாகப் வெட்டுகிறேன். அது ஆறு துண்டுகளை உருவாக்கும். பின்னர் அதன் முனைகளை ஒட்டுகிறேன். அதன் பிறகு காகிதத்தை ஒரு சதுரமாக மடித்து மறுபுறம் பசை தடவுவேன். இப்படித்தான் நான் ஒவ்வொரு பாக்கெட்டையும் செய்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.
ஆதித்யபூரில் வசிக்கும் இந்த 75 வயது மூதாட்டி தனது இரண்டடுக்கு மண் வீட்டின் முற்றத்திலும் தாழ்வாரத்திலும் சிதறிக் கிடக்கும் பழைய செய்தித்தாள்களுக்கு மத்தியில் அமர்ந்துக் கொண்டு எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
1998-ல் இதை அவர் தொடங்கும் போது, அவரது கணவர் ஆனந்தகோபால் சாஹா உயிருடன் இருந்தார். கிராம மக்களின் மாடு மற்றும் ஆடுகளை அவர் கவனித்து கொண்டதால், ஒரு நாளைக்கு சுமார் ரூ 40-50 வரை சம்பாதித்து வந்தார். அப்போது "நாங்கள் வறுமையில் இருந்தோம்," என்கிறார் சுன்ரி சமூகத்தைச் சேர்ந்த சோபி சாஹா. "உணவுக்கேனும் கொஞ்சம் சம்பாதிக்கலாம் என்பதற்காக இந்த வேலையைச் செய்ய முடிவு செய்தேன்."
அண்டை வீட்டாரால் தூக்கி எறியப்பட்ட செய்தித்தாள்களை சேகரிப்பதிலிருந்து அவர் தொடங்கியுள்ளார். உள்ளூர் மளிகைக் கடைகளில் கிடைத்த பேப்பர் பாக்கெட்டுகளைப் பார்த்து, அவற்றை எப்படிச் செய்வது என்று தனக்குத்தானே கற்றுக் கொண்டுள்ளார். "இதை செய்ய தேவைப்படும் எல்லா பொருட்களும் எளிதில் கிடைக்கக்கூடியவை என்பதாலும், இதை நான் வீட்டிலேயே செய்ய முடியும் என்பதாலும் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தேன்," என்று விவரிக்கும் சோபி, "முதலில், நான் பொறுமையாக செய்தேன். ஒரு பாக்கெட்டை செய்யவே எனக்கு 25 முதல் 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது," என்றும் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு நாளைக்கு சுமார் ஒரு கிலோ பைகள் மட்டுமே என்னால் செய்ய முடியும்," என்கிறார்.








