சிக்கனமாக உருவாக்கப்பட்ட புதுமை என அழைக்கலாம். ஆனால் 65 வயது நாராயண் தேசாய், அது தன் கலையின் மரணம் என குறிப்பிடுகிறார். சந்தைத் தேவைகளுக்காக செய்யப்படும் ஷெனாய் கருவி வடிவமைப்புகளின் மாற்றத்தைதான் அவர் சொல்கிறார். அக்கலைக்கான இருத்தலுக்கே அது அச்சுறுத்தல்.
காற்றினால் வாசிக்கப்படும் இசைக்கருவியான ஷெனாய், திருமணங்கள், விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் பிரபலமாக பயன்படுத்தப்படுவதாகும்.
இரண்டு வருடங்களுக்கு முன் வரை, தேசாய் உருவாக்கிய ஒவ்வொரு ஷெனாயின் முடிவிலும் பித்தளை மணி இணைக்கப்பட்டிருக்கும். பாரம்பரியமாக கையால் உருவாக்கப்படும் ஷெனாயின் மரப்பகுதியிலிருந்து வெளிப்படும் இசையை இந்த மணிதான் அற்புதமாக்கும். தன் தொழிலில் அவர் உச்சத்தில் இருந்த 1970களில், தேசாயிடம் எப்போதும் ஒரு டஜன் பித்தளை மணிகள் இருப்பு இருக்கும். கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்திலுள்ள சிக்கோடி டவுனிலிருந்து பெறப்பட்டவை அவை.
எனினும் சமீபத்திய வருடங்களில், அவரது உத்தியை இரு காரணிகளால் அவர் மாற்ற நேரிட்டது. பித்தளை மணிகளின் அதிகரிக்கும் விலையும் நல்ல ஷெனாய்க்கான உற்பத்திச் செலவை கொடுக்க வாடிக்கையாளர்களிடம் இருக்கும் ஆர்வமின்மையும் அரை நூற்றாண்டாக பயன்படுத்தப்படும் உத்தியை அவர் மாற்ற வைத்தது.
“ஷெனாயை 300-400 ரூபாய்க்கு கேட்க மக்கள் தொடங்கிவிட்டனர்,” என்கிறார் அவர். பித்தளை மணி மட்டுமே 500 ரூபாய் ஆகும் நிலையில் இது சிரமமான விலை என்கிறார் அவர். பல ஆர்டர்களை தவற விட்ட பிறகு, நாராயண் ஒரு தீர்வை கண்டடைந்தார். “கிராமத்து கண்காட்சியில் பிளாஸ்டிக் ட்ரம்பட்டுகளை வாங்கி, அதன் முனைகளை (மணிகளை போல் தோற்றமளிப்பவை) வெட்டி, ஷெனாய்களில் பித்தளை மணிகள் இருக்கும் இடத்தில் பொருத்தினேன்.
“சத்தத்தை அது பாதிக்கும் என்றாலும் மக்கள் அந்த தரமே போதும் என்கின்றனர்,” என புலம்புகிறார். புரிதல் கொண்ட வாடிக்கையாளரிடம், அவரே பித்தளை மணியை வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பை வழங்குகிறார் அவர். பிளாஸ்டிக்கில் அவர் வாங்கும் மாற்றின் விலை வெறும் 10 ரூபாய்தான். கலையை நீர்த்து போக வைத்த சுமை மட்டும் அவர் மனசாட்சிக்கு மிச்சம்.

























