"ஃபில்ம் மேன் ஹோனா சாஹியே லவ் ஸ்டோரி, குச் எமொஷனல் ஸா [படத்தில் காதல் கதை இருக்க வேண்டும். அதுவும் உணர்ச்சிப்பூர்வமானதாக இருக்க வேண்டும்]," என்று மும்பையின் கிராண்ட் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஆல்ஃபிரட் டாக்கீஸ் என்ற ஒற்றைத் திரைத் திரையரங்கின் முகப்பில் அமர்ந்திருக்கும் 36 வயது ஷியாம் சிங் கூறுகிறார். "சண்டை மற்றும் அதிரடி காட்சிகள் இருக்கலாம். ஆனால் எனக்கு காதல் கதைகள் தான் பிடிக்கும்," என்று கூறி புன்னகைக்கிறார்.
அது டிசம்பர் மாத வெயில் நிறைந்த மதியப் பொழுது. ஷியாம், மதியம் 3 மணி காட்சிக்காக காத்திருக்கிறார். பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ராம் தேரி கங்கா மைலி' படத்தின் கையால் வரையப்பட்ட சுவரொட்டி தியேட்டரின் நுழைவாயிலில் தொங்குகிறது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்பு, 1985-ல் வெளியான இந்த பாலிவுட் வெற்றிப் படம், இன்றும் கணிசமான அளவு கூட்டத்தை ஈர்க்கிறது.
ஆல்ஃபிரட் டாக்கீஸின் நுழைவாயிலில் இந்தி மற்றும் உருது மொழிகளில் "தினமும் 3 காட்சிகள்" என்று ஒரு அறிவிப்புப் பலகை உள்ளது. இதுதான், அங்கு திரையிடப்படும் தினசரி மூன்று காட்சிகளின் அட்டவணை. முதல் காட்சி மதியம் 12 மணிக்கும், இரண்டாவது காட்சி மதியம் 3 மணிக்கும், கடைசி காட்சி மாலை 6 மணிக்கும் என்றும் அட்டவணை அறிவிக்கிறது
"ஹமேன் மூவி தேக்னே கா ஷௌக் ஹை [எனக்கு படம் பார்ப்பது முகவும் பிடிக்கும்]," என்கிறார், அதிக சம்பளத்திற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்திலிருந்து மும்பைக்குக் குடிபெயர்ந்த ஷியாம்.
"இங்கு ஆல்ஃபிரட் டாக்கீஸில் டிக்கெட்டுகள் மலிவாக கிடைக்கும்," என்கிறார் அவர். "அதனால் நாங்கள் விரும்பும் போதெல்லாம் இங்கு வருவோம்." ஒரு டிக்கெட்டின் விலை ரூ.35-தான். "விலையுயர்ந்த திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களைப் பார்க்கும் அளவுக்கு எங்களுக்கு சம்பாத்தியம் இல்ல."
ஷியாம், பிருஹன்மும்பை மாநகராட்சியில் (பிஎம்சி) ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிகிறார். நிகழ்வுகளுக்கான பொருட்களைத் தயாரிப்பது, பரிமாறுவது மற்றும் சுத்தம் செய்வது என கேட்டரிங் துறையில் பணிபுரிகிறார். கிராண்ட் ரோடு பகுதி அருகில் வசிக்கும் அவர் மாதம் சுமார் 9,000 ரூபாய் சம்பாதிக்கிறார். அவரது குடும்பத்தினர் நேபாளத்தில் உள்ள புட்வால் நகரத்தில் வசிக்கின்றனர்.


















