குடிநீர் பெறுவதற்கு கங்குபாய் சவான் மன்றாட வேண்டும். “சர்கார்! வாட்ச் மேன் அய்யா! தயவுசெய்து எங்களுக்கு குடிநீர் கொடுங்கள். நான் இங்குதான் வசிக்கிறேன், அய்யா.”
மன்றாடுதல் மட்டும் போதாது. அவர் அவர்களுக்கு வாக்குறுதியும் அளிக்க வேண்டும். “உங்களின் பாத்திரங்களை நான் தொட மாட்டேன்.”
நீருக்கு கங்குபாய் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) தனியார் குழாய்களையும் டீக்கடைகளையும் திருமண மண்டபங்களையும் சார்ந்திருக்கிறார். அவரின் வீடாக இருக்கும் கோகுல் நகர் பகுதியின் நடைபாதைக்கு எதிரே இருக்கும் ஹோட்டல் போன்ற கட்டடங்களின் காவலாளிகளிடம் கெஞ்சி நீர் பெறுகிறார். ஒவ்வொரு முறை அவருக்கு நீர் தேவைப்படும் ஒவ்வொரு நாளும் இப்படித்தான் அவர் நீர் பெறுகிறார்.
நீர் கண்டறிவது தினசரி வேலை. அவரின் தேடல், ஒரு காலத்தில் குற்றப் பழங்குடியாக வரையறுக்கப்பட்டிருந்த பான்சே பார்தி சமூகத்தை சேர்ந்தவர் அவர் என்கிற உண்மையால் பன்மடங்கு கஷ்டமாகிறது. காலனியாதிக்க காலத்தில் சூட்டப்பட்ட அப்பெயர், இந்திய அரசாங்கத்தால் 1952ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. ஆனால் 70 வருடங்கள் ஆகியும் கங்குபாய் போன்றவர் இன்னும் அடிப்படை உரிமைகளுக்காக போராட வேண்டியிருக்கிறது. திருடப் போவதில்லை என அவர் பிறரிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போதுதான் ஒரு ட்ரம் நீர் அவருக்குக் கிடைக்கிறது.
“’இங்கு நீங்கள் வைத்திருக்கும் எந்தப் பொருளையும் நாங்கள் தொட மாட்டோம்,’ என சொன்னால் மட்டும்தான் அவர்கள் எங்களுக்கு கொஞ்சம் நீரை கொடுப்பார்கள்,” என்கிறார் கங்குபாய். அனுமதி கொடுக்கப்பட்டதும், சிறு பாத்திரங்களிலும் ப்ளாஸ்டிக் ட்ரம்களிலும் குடிநீர் குடுவைகளிலும் எவ்வளவு பிடிக்க முடியுமோ அவ்வளவு நீர் பிடித்துக் கொள்வார். ஒரு ஹோட்டலில் மறுக்கப்பட்டால், அடுத்த ஹோட்டலை அணுகுவார். அவமதிக்கும் உரிமையாளர்களை பொருட்படுத்த மாட்டார். குடிக்கவும் சமைக்கவும் வீட்டுக்கும் தேவையான நீர் பெற, கிட்டத்தட்ட நான்கைந்து இடங்கள் அவர் கேட்க வேண்டும்.
















