“அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் தொலைக்காட்சியில் மட்டும்தான்,” என்கிறார் சுவாமி. இவர் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் சுமார் 1,500 மக்கள் வசிக்கும் கணங்கூரு என்கிற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி.
கர்நாடகாவில் மே 12 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிக்கைகள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் நேரடியாகக் களத்திலும் கசப்பான அரசியல் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மதச் சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) தனது தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு விவசாயியின் கடனையும் ஒரு வருடத்திற்குள் ரத்து செய்து விடுவதாகவும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு உள்ள கடனை ரத்து செய்து விடுவதாகவும் கூறியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியானது(பிஜேபி) தேசியமாயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்டுள்ள ரூ 1 லட்சம் வரையிலான கடனைத் தள்ளுபடி செய்துவிடுவதாக உறுதியளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடன் தள்ளுபடியைக் குறித்து எதுவும் கூறவில்லையென்றாலும், ”விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2018 முதல் 2023 வரை) ரூபாய் 1.25 லட்சம் கோடி செலவில் நீர்ப்பாசனத் திட்டங்கள் வகுப்போமென்றும் உறுதியளித்துள்ளது. பிஜேபி மற்றும் ஜேடிஎஸ் இரண்டுமே அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலம் முழுவதற்குமான நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக ரூ 1.5 லட்சம் கோடிகள் செலவழிக்கவிருப்பதாகக் கூறியுள்ளன.
ஆனால் கணங்கூருவின் விவசாயிகள் இத்தகைய வெட்டி வாக்குறுதிகளை நம்பத் தயாராக இல்லை. “இதை [தொலைக்காட்சியில் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவது] விட , அரசியல் தலைவர்கள் காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க முன்வரலாம். மக்களும் தங்கள் நிலங்களில் பயிர் செய்து சாப்பிட்டு நிம்மதியாக வாழ முடியும்,” என்கிறார் சுவாமி (இப்பகுதி விவசாயிகள் தங்களது முதல் பெயரை மட்டுமே பயன்படுத்த விரும்புகிறார்கள்.)






