2014 ஆம் ஆண்டில், ஒடிசாவின் பிசம்கட்டாக் வட்டாரத்தில் உள்ள வனத்துறை அதிகாரி ஒருவர் கந்துகுடா கிராமத்திற்குச் சென்று கிராம மக்களுக்கும், வனத்துறைக்கும் இடையேயான நீண்டகால மோதல் குறித்து விவாதித்தார். பெரியவர்கள் முன்னிலை வகிக்க, முற்றிலும் பெண்கள் கூடியிருந்த கூட்டம் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. மற்ற இந்திய கிராமங்களில், ஆண்கள் பெரும்பான்மையாக இருக்கும் கூட்டத்தில் ஒரு ஆண் பஞ்சாயத்து தலைவரை அவர் சந்தித்திருக்கலாம்.
ஆனால் இங்கு, ராயகடா மாவட்டத்தின் சமவெளிகளில் உள்ள பெரும்பான்மை பழங்குடியினரான கோண்டுகளில் (மக்கள் தொகை: 9, 67,911, இதில் 5,41,905 பேர் பல்வேறு பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்), பெண்களே பல முக்கியமான முடிவுகளை எடுக்கின்றனர். தந்தைவழி என்றாலும், ஆண்களும் பெண்களும் சமமாக வாழ்வதை சமூகம் உறுதி செய்கிறது. நியாம்கிரியில் உள்ள கரண்டிகுடா கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான லோகோநாத் நௌரி விளக்குவது போல், "மலையில் அமர்ந்திருக்கும் நியம ராஜா (நியாம்கிரியின் கடவுள்) ஆண். எங்கள் கிராம தெய்வம் பெண் [கிராமத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள குலக்குறி போன்ற மர அமைப்பு]. இந்த இருவரால்தான் நாங்கள் வளமாக இருக்கிறோம். இருவருக்கும் தீங்கு வந்தால் உயிர்வாழ முடியாது," என்றார்.
கோண்டு மக்களிடையே வேலைகளும் இந்தத் தத்துவத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் சமமாக பங்கேற்று தங்கள் கருத்துக்களை பாதுகாக்கின்றனர். ஆண்கள் விவசாயம் செய்து வேட்டையாடும்போது, பெண்கள் தங்கள் சமூகத்தின் மீதமுள்ள பணிகளை கவனித்துக்கொள்கிறார்கள்.






