திருச்சூரில் இருந்து வரவூர் வெகு தூரம் என்று சொல்லப்பட்டாலும், ஆட்டோவில் ஏறிவிட்டால் அப்படி தெரியவில்லை. பரந்து விரிந்த ரப்பர் தோட்டங்கள், நம் மனதில் நின்றுவிடுகின்றன. திறந்த வெளியின் சாலையோரம் ஒரு குடிசைக்கு முன் எங்கள் ஆட்டோ நின்றது. பசுமைப்படை முன்முயற்சி என்ற புதிய திட்டத்திற்கான ஆய்வகங்களாக மாறியுள்ள வடக்கஞ்சேரி வட்டாரத்தில் உள்ள ஒன்பது கிராம ஊராட்சிகளில் வரவூரும் ஒன்று.
10 ஏக்கர் விவசாய நிலத்தில், மனிதர்களை அதிகம் காண முடியவில்லை. மாறாக, இரண்டு டிராக்டர்களின் ஒலி ஈர நிலத்தில் ரீங்காரமிடுகின்றன. குனிந்து நிற்கும் நெற்கதிர்களுக்கு நடுவே பசுமை படை பணியாளர்கள் 7 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அடர் பச்சை சீருடை அணிந்திருந்தனர். அவர்களில் சிலர் அகன்ற தொப்பிகளுடன் இருந்தனர். நாங்கள் வயல் வரப்பில் இறங்கியதும், பச்சை சட்டை அணிந்த விவசாயி ஒருவர் கையில் பீடியுடன் என் நண்பரை நோக்கி வந்தார். இது கே.பி.மைதீன். உள்ளூர் பத்திரிகை ஒன்றில் பத்திரிக்கையாளராக இருக்கும் என் நண்பரால் தனக்கு உதவ முடியும் என்று அவர் நினைக்கிறார்.
அவர்களின் பண்ணைக்கு அருகில் சுரங்கம், குவாரி பணிகள் நடந்து வருகிறது. அங்கு, தான் வேலை செய்யும் செய்தித்தாள் இருப்பதாக என் நண்பர் கூறுகிறார். வரவூரில் இந்த நிலத்தில் வேலை செய்யும் 10 விவசாயிகளில் மொய்தீனும் ஒருவர். அவர் கவலையுடன் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. ஆனால் கேரள தொழிலாளர் வங்கியின் பசுமை படை பணியாளர்கள் சீருடையில் அவரது பண்ணையில் மும்முரமாக வேலை செய்து இரண்டு முக்கியமான பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வு கண்டுள்ளனர். நெல் சாகுபடியில் உற்பத்தி குறைவு, விவசாய தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை.
கேரளாவின் சமூக குறியீடுகள் சிறப்பாக இருந்தாலும், விவசாயம் அவ்வளவு சிறப்பாக இல்லை. 1975 முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கேரளாவின் பிரதான உணவான நெல் சாகுபடி 8.84 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3.52 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. வடக்கஞ்சேரி வட்டத்தில் கிட்டத்தட்ட கால் பங்கு நிலத்தில் நெல் பயிரிட முடியும் என்றாலும், விவசாயம் மந்த நிலையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 2011வாக்கில் உற்பத்தித் திறன் 2 லட்சம் ஹெக்டேருக்கு கீழ் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கேரளா அச்சம் கொள்வதிலும் காரணம் உள்ளது. இடுபொருட்கள் விலை உயர்வால், விவசாயிகள் விவசாய தொழிலாளர்களையும், நிலங்களையும் இழந்தனர். பசுமை படையை அணுக என்ன காரணம் என்று கேட்டபோது, "இந்த வேலைக்கு வேறு ஆட்களை கிடைக்கவில்லை," என்று ஏ.டி.மொய்தீன் தோள்களைக் குலுக்கினார். மக்கள் தொகை பெருகியது. ஆனால் நிலங்கள் தரிசாகின. விவசாயம் நடைபெறவில்லை. அபாய நிலையை எட்டியதும் 2007ஆம் ஆண்டு மாநில அரசு 'உணவுப் பாதுகாப்பு செயல் திட்டத்தை' அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டியது. லட்சியங்களை நிறைவேற்ற, வடக்காஞ்சேரி வட்டத்தில் மட்டுமே நூறு சதவீத நெல் சாகுபடியை பசுமைப்படை மேற்கொண்டது.





