முகமது ஷோயப்பின் கடை 24x7 திறந்திருக்கும். ஆனால் அவரது சிறப்பு உணவை நீங்கள் சுவைக்க விரும்பினால், அதிகாலையில் வர வேண்டும்.
35 வயதான இவர், நவகடல் ஏரியாவில் கிராட்டா பால் என்ற பகுதியில் 15 ஆண்டுகளாக பாரம்பரிய ஹரிஸா கடையை நடத்தி வருகிறார். ஸ்ரீநகரின் மையப்பகுதியில் உள்ள இந்த இடம் நகரத்தின் ஹரிஸா உணவுகளின் கோட்டையாகத் திகழுகிறது. அவற்றில் சில மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலானவை. உணவின் செய்முறை அதைவிட பழையது.
"சமையல் கலைஞர் ஷா-இ-ஹம்தானிடமிருந்து தான் (ஈரானைச் சேர்ந்த 14-ம் நூற்றாண்டு சூஃபி துறவி) ஹரிஸா வந்தது என என் தந்தை கூறி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அதை பள்ளத்தாக்கில் உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்", என்கிறார் நான்காம் தலைமுறையாக ஹரிஸா தயாரித்து வரும் சோயிப்.
இளம் ஆட்டின் இறைச்சியுடன் அரிசி சேர்த்து தயாரிக்கப்படும் இந்த உயர் புரத காலை உணவு, வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே கிடைக்கும் - அக்டோபர் முதல் மார்ச் வரை – மீட்டி (துண்டுகளாக வெட்டப்பட்ட இளம் ஆட்டின் குடல்) மற்றும் சூடான எண்ணெயில் தெளிக்கப்பட்ட கெபாப், சில கண்டர் சோட் (கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட உள்ளூர் ரொட்டி) ஆகியவற்றுடன் சூடாக பரிமாறப்படுகிறது. பச்சை, கருப்பு ஏலக்காய், இலவங்கப் பட்டை, கிராம்பு போன்ற மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. பின்னர் இது மண்ணில் புதைக்கப்பட்ட மட்டில் (செம்பு அல்லது மண் பானை) ஒரே இரவில் விறகு அடுப்பில் சமைக்கப்படுகிறது.












