அவருக்கு விராட் கோலி தான் உயிர். அவளோ பாபர் ஆசாமின் தீவிர ரசிகை. கோலி சதம் அடித்தபோது அவர் கொண்டாடினால், பாபர் சிறப்பாக விளையாடும்போது அவள் அவரை கிண்டல் செய்வார். ஆயிஷா மற்றும் நூருல் ஹசனின் காதல் மொழி கிரிக்கெட் தான். அவர்களின் திருமணம், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது என்பதை அவர்களைச் சுற்றியுள்ள எவரும் நம்ப மாட்டார்கள்.
ஜூன் 2023 இல் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளிவந்தபோது, ஆயிஷாவிற்கு கண்கள் ஒளிர்ந்தன. ஏனெனில் அதில், அக்டோபர் 14ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இருந்தது. "நாம் அதை மைதானத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்று நான் நூருலிடம் சொன்னேன்” என 30 வயதான ஆயிஷா, மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள தான் பிறந்த கிராமம், ராஜாச்சே குர்லேயில் இருந்து நினைவு கூர்கிறார். “இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டியிட்டு விளையாடுவது அரிது. எங்கள் இருவருக்குமான அபிமான வீரர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்ப்பது ஒரு அரிய வாய்ப்பு.”
சிவில் இன்ஜினியரான 30 வயது நூருல், சில முயற்சிகளுக்கு பின், இரண்டு டிக்கெட்டுகளைப் பெற முடிந்தது. தம்பதியினருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அப்போது ஆயிஷா கர்ப்பமாகி ஆறாவது மாதத்தில் இருந்ததால், சதாரா மாவட்டத்தில் உள்ள பூசேசாவலி கிராமத்தில் இருந்து 750 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள அனைத்து வழிகளையும் முன்னதாகவே திட்டமிட்டனர். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு, தங்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் போட்டி நாளன்று இருவரும் போட்டியைக் காண செல்லவில்லை.
அக்டோபர் 14, 2023 விடியலின் போது, நூருல் இறந்து ஒரு மாதமாகியிருந்தது, ஆயிஷா முற்றிலுமாக உடைந்து போயிருந்தார்.








