“அரசாங்க திட்டங்கள் எங்களுக்கு எப்படி தெரியும்? அவற்றை பற்றி எங்களுக்கு சொல்ல எவருமில்லை,” என்கிறார் மகாராஷ்டிராவின் தராஷிவ் மாவட்டத்தை சேர்ந்த 42 வயது சஞ்சீவனி பெதாகே. துல்ஜாபூர் தாலுகாவின் ஜால்கோட் கிராமத்தை சேர்ந்த விவசாயியான அவர், கூடுதல் வருமானத்துக்காக பிறரின் நிலங்களில் கூலி வேலையும் செய்கிறார். 2020ம் ஆண்டிலிருந்து அவர், பல்வேறு அரசு திட்டங்களில் இணைய முயற்சித்து வருகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் முயற்சி தோல்விதான் அடைந்திருக்கிறது. “என் கணவரான ஷங்கர், ஊரடங்குக்கு சில நாட்களுக்கு முன் ஜனவரி 24, 2020-ல் தற்கொலை செய்து கொண்டார்,” என்கிறார் சஞ்சீவனி. “ஒரு மனிதர் செத்தாலும், அவரின் கடன் சாவதில்லை. கடன் சுமையால்தான் என் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இப்போது நான் அந்த சுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”
இறந்து போன கணவரின் தந்தைக்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் ஜால்கோட்டில் இருக்கிறது. அதில் ஷங்கரும் அவரின் மூன்று சகோதரர்களும் கூட்டாக விவசாயம் பார்த்திருந்தார்கள். “எங்களின் நிலம் ஒரு மானாவாரி நிலம். நீர்ப்பாசன வசதி கிடையாது. எனினும் நல்ல விலை கிடைக்கும் என்பதால், நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை நாங்கள் விதைப்போம்,” என்கிறார் சஞ்சீவனி. “மழைக்காலத்தில் சோயாபீன்ஸ் மற்றும் துவரை போன்றவற்றையும் தீபாவளிக்கு பிறகு கோதுமை, சோளம், கொண்டக்கடலை போன்றவற்றையும் விளைவிப்போம்.”
2011ம் ஆண்டு தொடங்கி 2014 வரை, ஒரு குவிண்டால் சோளம், கோதுமை, கொண்டக்கடலை ஆகியவைக்கு ரூ.2,200 விலையும் ஒரு குவிண்டால் சோயாபீன் மற்றும் துவரைக்கு ரூ.5,000 விலையும் கிடைக்கும். குடும்பத்துக்கு கொஞ்சத்தை வைத்தது போக, ஒவ்வொரு பயிரும் 4 குவிண்டால் அளவுக்கு அவர்களிடம் இருக்கும். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 26,400 இருக்கும். 5 குவிண்டால் சோயாபீன் மற்றும் துவரை ஆகியவைற்றின் மதிப்பு ரூ.50,000 ஆக இருக்கும். அதாவது வருடத்துக்கு கிட்டத்தட்ட ரூ.76,400. நான்கு சகோதரர்களுக்கு பணம் நான்காக பிரித்து கொடுக்கப்படும் என்கிறார் ஜால்கோட்டில் சஞ்சீவனி.
“நாங்கள் வாழ்ந்து வந்த கச்சகாரில் (வைக்கோல் கூரையுடனான மண் வீடு) நிறைய பிரச்சினைகள் இருந்தது,” என்கிறார் அவர். “குறிப்பாக மழைக்காலத்தில், கூரையில் ஒழுகியது. எங்களின் குழந்தைகளும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டன. மருத்துவத்துக்கு விலை மிக அதிகமாக இருந்தது.”








