பிப்ரவரி 28, 2023 மாலை 6 மணி. அழகான கோல்தோதா கிராமத்தில் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கியதும் 35 வயது ராம்சந்திர தோதாகே நீண்ட இரவுக்கு தயாராகிறார். அவர் அதிக ஆற்றல் கொண்ட ‘கமாண்டர்’ டார்ச் லைட்டை பரிசோதித்துக் கொள்கிறார். படுக்கைகளை தயார் செய்கிறார்.
அவர்களின் சிறிய வீட்டில், மனைவி ஜெயஸ்ரீ இரவுணவான பருப்பு மற்றும் காய்கறி கூட்டு செய்கிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும் 70 வயது தாதாஜி தோதாகேயும் இரவுக்கு தயாராகிறார். அவரின் மனைவி, தங்களின் நிலத்தில் விளைவித்த மணம் கொண்ட அரிசி வகையை கொண்டு சோறும் சப்பாத்திகளும் தயாரிக்கிறார்.
“கிட்டத்தட்ட நாங்கள் தயாராகிவிட்டோம்,” என்கிறார் 35 வயதுக்காரர். “எங்களின் உணவு தயாரானதும் கிளம்பிவிடுவோம்.” ஜெயஸ்ரீயும் ஷாகுபாயும் எங்களுக்கான இரவுணவை கட்டிக் கொடுப்பார்கள் என்கிறார்.
மனா (பட்டியல் பழங்குடி) சமூகத்தை சேர்ந்த தோதாகேகளின் இரு தலைமுறைகளை சேர்ந்த தாதாஜியும் ராம்சந்திராவும்தான் என்னை இன்று பார்த்துக் கொள்ளப் போகிறவர்கள். தாதாஜி பாபாசாகெப் அம்பேத்கரை பின்பற்றுபவர். விவசாயியும் கூட. தந்தையின் அண்ணனான பிகாஜி, விவசாயம் பார்க்க முடியாதளவுக்கு ஆரோக்கியம் குன்றியிருப்பதால், குடும்பத்தின் ஐந்து ஏக்கர் நிலத்தை ராம்சந்திரா பார்த்துக் கொள்கிறார். கிராமத்துக்கும் காவல்துறைக்கும் இணைப்பாக இருக்கும் ‘காவலர் தலைவர்’ பதவியில் முன்பு இருந்தவர் பிகாஜி.
சில மைல்கள் தொலைவில் இருக்கும் ராம்சந்திராவின் நிலத்தில், ஜக்லி என அவர்கள் குறிப்பிடும் இரவுரோந்து செல்ல, நாக்பூர் மாவட்டத்தின் பிவாபூர் தாலுகா கிராமத்தில் நாங்கள் கிளம்பிக் கொண்டிருந்தோம். வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றுவதுதான் பணி அது. ராம்சந்திராவின் மூத்த மகனான, ஒன்பது வயது அஷுடோஷும் எழுவர் கொண்ட எங்களின் குழுவில் ஒருவர்.


























