துர்கா துர்கா போலே அமர்,
தோக்தோ ஹோலோ கயா
ஏக்பார் டே கோ மா
கோரோனேரி சயா
என் உடல் எரிகிறது
‘துர்கா துர்கா’ என உச்சரிக்கிறேன்
உன் அருளின் ஆறுதலுக்காக
இறைஞ்சுகிறேன் தாயே…
துர்காவை புகழ்ந்து பாடுகையில் கலைஞர் விஜய் சித்ரகாரின் குரல் உயர்கிறது. அவரைப் போன்ற பைத்கார் கலைஞர்கள் பாடலை முதலில் எழுதுவார்கள். 14 அடி நீளம் வரையிலான ஓவியத்தை பிறகு வரைவநர்கள். பிறகு அவற்றை பார்வையாளருக்கு இசையோடு ஒரு கதை சொல்லி வழங்குவார்கள்.
41 வயது விஜய், ஜார்கண்டின் புர்பி சிங்பும் மாவட்டத்தின் அமடோபி கிராமத்தில் வசிக்கிறார். உள்ளூர் சந்தாலி கதைகள், கிராமப்புற வாழ்க்கை, இயற்கை மற்றும் புராணம் ஆகியவற்றை சார்ந்து பைத்கார் ஓவியங்கள் அமையும் என்கிறார். “கிராமப்புறக் கலைதான் எங்களின் பிரதான பண்பாடு. எங்களை சுற்றி நாங்கள் பார்ப்பதைதான் கலையில் பிரதிபலிக்கிறோம்,” என்கிறார் 10 வயதிலிருந்து பைத்கார் ஓவியங்களை உருவாக்கும் விஜய். “கர்மா நடனம், பகா நடனம் அல்லது ராமாயணா, மகாபாரதா ஓவியம், ஒரு கிராமப்புறக் காட்சி…” சந்தாலி ஓவியத்தின் பல விஷயங்களை அவர் சொல்கிறார். “வீட்டுவேலைகள் செய்யும் பெண்கள், வயலில் மாடுகளுடன் வேலை செய்யும் ஆண்கள், வானில் பறக்கும் பறவைகள் ஆகியவற்றைக் காட்டும்.”
“என் தாத்தாவிடமிருந்து இந்தக் கலையை நான் கற்றுக் கொண்டேன். அவர் பிரபலமான கலைஞர். கொல்கத்தாவிலிருந்து மக்கள் அப்போது தேடி வருவார்கள். வந்து அவர் (ஓவியத்தை) பாடுவதைக் கேட்பார்கள்.” விஜயின் குடும்பம் பல தலைமுறைகளாக பைத்கார் ஓவியர்களாக இருந்திருக்கிறார்கள். ”வடிவம் சுழல் போல் இருக்கும். எனவேதான் பைத்யகார் ஓவியமென்ற பெயர் வந்தது.”
















