“இயற்கை சாயங்களால் சாயமிடப்பட்ட துணிகளைக் கழுவுவதற்கு பாயும் நதி தேவைப்படுகிறது,” என்கிறார் அப்துல் ஹலீம். “யஹான் பே தோ ஹாத் தோனே கா பானி நஹி மில்தா [இங்கே கை கழுவுவதற்கு கூட போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை]!
குறைந்து வரும் லாபத்தோடும், போலி தாயாரிப்புகளின் அதிகரிப்பையும் எதிர்கொண்டு, தனது அச்சுப்பட்டறையை தொடர்ந்து நடத்த போராடுகிறார் மூன்றாம் தலைமுறை பிளாக் பிரிண்டிங் கைவினைஞரான ஹலீம். தண்ணீர் பஞ்சம் கொண்ட இந்தூரில், வேறு வழியில்லாமல், வண்ணத்தை விரைவாகத் தக்கவைக்க, ரசாயன சாயங்களைப் பயன்படுத்துகிறார்.
பிளாக் பிரிண்டிங், பெயருக்கேற்ப அதற்கான மரத் தொகுதிகளை வடிவமைப்பதில் தொடங்குகிறது. ஹலீம் வடிவமைப்புகளை உருவாக்கி, அதனை ஜெய்ப்பூர், ஃபரூக்காபாத் மற்றும் ஃபதேஹ்பூரில் உள்ள பிளாக் தயாரிப்பாளர்களுக்கு அனுப்புகிறார். அவர்கள் சக்வான் (தேக்கு) அல்லது ஷீஷாம் (இந்திய ரோஸ்வுட்) பயன்படுத்தி, பிளாக்குகளை உருவாக்குகிறார்கள்.
இந்த பிளாக்குகள் சாயத்தில் நனைக்கப்பட்டு துணியில் அச்சிடப்படுகின்றன. "இது எங்கள் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்," என்று சந்தேரி துப்பட்டாவில் இளஞ்சிவப்பு ரோஜாக்களை அச்சிட குனிந்தபடி ஹலீம் கூறுகிறார். அச்சிடும் வடிவம் கலையாத வண்ணம், கவனமாக செயல்படுகிறார். அவர் பயன்படுத்தும் சாய கலவை, சணல், முல்முல் பருத்தி மற்றும் கொசு வலைகளால் வடிகட்டப்பட்டு, பின்னர் துணியில் அச்சிட பயன்படுத்தப்படுகிறது. வானிலையைப் பொறுத்து, குறிப்பாக மழைக்காலங்களில், இந்த செயல்முறையை சிக்கலாகிறது. துணிகளை உலர்த்த, குறைந்தது 72 மணிநேரம் ஆகும்.














