இந்தக் கதை, புலிட்சர் மையத்தால் ஆதரிக்கப்படும் பார்த் எம்.என். எழுதிய தொடரின் ஒரு பகுதியாகும்.
75 வயதான அஸ்மா கான், கடுமையான மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு சிகிச்சையளிக்கும் தீர்வைத் தேடி, 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்து வந்துள்ளார். அவர்கள் வந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, ஆனால் தாயும் மகளும் இன்னும் வீடு திரும்பவில்லை.
மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் உள்ள சம்பாஜி நகர் (முன்னர் ஔரங்காபாத்) மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தில் பிறந்த பாத்திமாவுக்கு மனநல பிரச்சினை கொண்ட ஒரு மகள் உள்ளார். அவருக்கு கடுமையான தலைச்சுற்றல் ஏற்பட்டு, அடிக்கடி மயக்கமடையச் செய்தது. இது படிப்படியாக அதிகமாகி நிலைமை மிகவும் மோசமானது.
"நாங்கள் அவளை ஒவ்வொரு மருத்துவராக அழைத்துச் சென்று பல ஆண்டுகள் கழித்தோம்," என்கிறார் அஸ்மா. "அவளுக்கு சிகிச்சை அளிக்க எங்கள் கால்நடைகளை விற்றோம். ஆனாலும் பலனில்லை. நிலைமை மோசமடைந்து, அவள் தன் சுயத்தை இழப்பதை எங்களால் உணர முடிந்தது."
ஒருநாள், பாத்திமாவால் யாரையும் அடையாளம் காண முடியவில்லை. அத்தோடு அவர் ஆழ்ந்த மனச்சோர்வில் விழுந்தாள். முப்பது வயதை தொட்டு விட்ட அவருக்கு, என்ன செய்வதென்று பெற்றோருக்கு தெரியவில்லை. அவருடைய மனநலம் குலைந்து போனதை நினைத்து தாயும் தந்தையும் துயரத்தில் ஆழ்ந்தனர். குடும்பத்தின் அடுத்த உணவை பெற உழைக்க வேண்டிய கட்டாயத்திலும் அவர்கள் இருந்தனர்.
"அவள் தன் துணிகளைக் கிழித்துக்கொள்வாள். அவளை கட்டுப்படுத்த எங்களுக்குத் தெரியவில்லை," என்று அஸ்மா நினைவுகூருகிறார். அப்போதுதான், பக்கத்து வீட்டுக்காரர், ஒரு அசாதாரணமான ஆலோசனையை வழங்கினார்.
அவர்கள் கிராமத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 117 ஆண்டுகள் பழமையான ஒரு கோயில் உள்ளதாகவும், புராணக்கதைகளின்படி, ஹஸ்ரத் ஹாஜி அப்துர் ரஹ்மான் ஷா அல்லது சைலானி ஷா பாபா, 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிம்பல்கான் சராய்க்கு வந்ததாகவும் கூறினார். இந்த கிராமம் விதர்பா பகுதியில் உள்ள புல்தானா நகரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. சைலானி பாபா 'தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்ட' மக்களை விடுவிப்பதில் தேர்ந்தவர். அவரது நினைவாக, அவர் இறந்த ஆண்டு 1908 -ல், இந்த தர்கா கட்டப்பட்டது.
அன்றிலிருந்து, ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் உர்ஸ் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.









