“யார் இந்து, யார் முஸ்லிம் என கண்டுபிடிப்பது கஷ்டம்.”
68 வயது முகமது ஷபிர் குரேஷி தன்னையும் பக்கத்து வீட்டை சேர்ந்த 52 வயது அஜய் சைனியையும் பற்றி பேசுகிறார். அயோத்தியிலுள்ள ராம்கோட்டின் துராகி குவான் பகுதியில் நண்பர்களாக கடந்த 40 வருடங்கள் வசித்து வருகின்றனர்.
குடும்பங்கள் நெருக்கமாக இருக்கின்றன. தினசரி விஷயங்களை பகிர்ந்து கொண்டு, ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகின்றன. அஜய் சைனி நினைவுகூருகையில், “ஒருமுறை நான் வேலைக்கு சென்றிருந்தபோது, என் மகளுக்கு ஆரோக்கியம் சரியில்லை என எனக்கு அழைப்பு வந்தது. வீட்டுக்கு நான் விரைந்து சென்றபோது, குரேஷியின் குடும்பம் என் மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருந்துகள் வாங்கிக் கொடுத்ததாக என் மனைவி தெரிவித்தார்.”
இருவரும் அமர்ந்திருக்கும் கொல்லைப்புறத்தில் எருமை மாடுகளும் ஆடுகளும் அரை டஜன் கோழிகளும் நிறைந்திருக்கின்றன. இரு குடும்பத்தின் குழந்தைகளும் ஓடியாடி பேசி விளையாடிக் கொண்டிருக்கின்றன.
அது ஜனவரி 2024. அயோத்தியின் ராமர் கோவிலுக்கு பிரம்மாண்டமாக திறப்பு விழா நடைபெற தயாராகிக் கொண்டிருந்தது. அவர்களின் வீடுகளுக்கும் கோவில் வளாகத்துக்கும் இடையில் புதிய, கனமான இரட்டை தடுப்பு முள்வேலி போடப்பட்டிருந்தது.
எண்பதுகளில் குரேஷி வீட்டருகே சைனியின் குடும்பம் குடியமர வந்தபோது அவர் பதின்வயதில் இருந்தார். அப்போதிருந்த பாபர் மசூதியின் வளாக ராமர் சிலைக்கு சென்றவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு அவர் மாலை விற்கும் வேலை செய்தார்.
குரேஷிகளின் பூர்விகத் தொழில் இறைச்சி வெட்டுவது. அயோத்திக்கு வெளியே குடும்பத்துக்கு ஒரு கறிக்கடை சொந்தமாக இருந்தது. 1992ம் ஆண்டில் அவர்களின் வீடு தீவைத்து எரிக்கப்பட்டபின், வெல்டிங் வேலையை குடும்பம் செய்யத் தொடங்கியது.
















