“எங்கள் கிராமத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு மேல் அவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது,” என்கிறார் ஷுக்லா கோஷ். பஸ்சிம் மெதினிபூரில் உள்ள குவாபூர் கிராமத்தை அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். “பெண்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் இதை எதிர்த்து போராட விரும்புகிறார்கள்.”
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் இளம் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மேற்கு வங்கத்தின் கிராமங்கள், சிறு நகரங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையில் திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களில் கோஷும் குவாப்பூரைச் சேர்ந்த சிறுமிகளும் அடங்குவர்.
2024, செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற எதிர்ப்பு பேரணி மத்திய கொல்கத்தாவின் கல்லூரி தெருவில் தொடங்கி சுமார் 3.5 கிலோமீட்டர் தூரம் ஷியாம்பஜார் நோக்கி சென்றது.
போராட்டக்காரர்களின் கோரிக்கைகளில் விரைவான நீதி மற்றும் குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை, கொல்கத்தா காவல் ஆணையர் பதவி விலக வேண்டும் (மருத்துவர்களின் போராட்டங்களின் கோரிக்கையும் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது), சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், உள்துறை மற்றும் மலை விவகாரங்கள் ஆகிய துறைகளை வைத்திருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் ஆகியவை அடங்கும்.












