“வெள்ளம் தாக்குவதை போல இங்கு போர்கள் கூட எங்களை தாக்குவதில்லை,” என்கிறார் ஜஸ்வீர் சிங். 73 வயது ஆகும் இந்த விவசாயி, இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் முள்வேலியருகே இருக்கும் தன் நிலத்தின் வெள்ளபாதிப்பை பார்த்து விட்டு வருகிறார்.
”எங்கு பார்த்தாலும் தண்ணீர்தான். ஆறு ஆக்கிரமித்துவிட்டது. 15-20 அடி ஆழம் இருக்கும்,” என்றார் ஜஸ்வீர் செப்டம்பர் 2025-ல் சட்லெஜ் ஆறை குறிப்பிட்டு.
வல்லே ஷா ஹிதார் கிராமத்தின் நாற்பது ஏக்கர் நிலம், 1990-ல் கட்டப்பட்ட வேலிக்கும் கான்க்ரீட் தூண்கள் இருக்கும் சர்வதேச எல்லைக்கும் இடையில் இருக்கிறது. இந்த நிலத்தில் உழுபவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையினரின் அனுமதி வேண்டும். ஜஸ்வீரின் குடும்பத்துக்கு இங்கு 19 ஏக்கர் நிலம் இருக்கிறது. 1980-ல் சொந்த கிராமத்தின் நிலத்தை விட விலை குறைவாக இருந்ததால் எல்லை கிராமத்து நிலத்தை அவர்கள் வாங்கியிருந்தார்கள். சொந்த ஊரான தே கலெந்தர் ஸ்கூட்டியில் 30 நிமிட தூரம்.
ஆகஸ்ட் 2025-ல் பஞ்சாபை வெள்ளம் பாதித்தபோது, ஜஸ்வீரின் 15 ஏக்கர் நிலத்தின் தண்ணீர் தேங்கியது. விளைந்திருந்த நெல் முற்றாக அழிந்தது. ஜனவரி 2026ல் பேசுகையில் அவர், “நிலம் ஈரமாக இருப்பதால் கோதுமை பயிரிட முடியாது. ஏழு-எட்டு எக்கர் நிலத்தின் நீர் வடிந்திருக்கிறது. இன்னொரு ஆறு மாதமோ ஒரு வருடமோ விட்டுதான் அதில் நான் விவசாயம் பார்க்க முடியும்.” இரண்டு பயிர்க்காலங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டது.
வெள்ளத்தால் பஞ்சாபில் கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்தனர். 7,161 கால்நடைகள் அடித்து செல்லப்பட்டன. 14,000 வீடுகளும் 200,000 ஹெக்டேர் பயிர் நிலமும் சேதமடைந்தது. “அறுவடைக்கு நெல் தயாராக இருந்தபோது, வெள்ளம் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டது,” என்கிறார் ஜஸ்வீரை போன்ற மற்றுமோர் விவசாயியான அஷோக் சிங்.
“என்னால் ஒழுங்காக தூங்க முடியவில்லை. தூக்கம் கலைந்துவிட்டால், மொத்த இரவும் கவலையிலேயே கழிந்து விடுகிறது,” என்கிறார் 40 வயது நிறைந்த அவர். 10 ஏக்கர் நிலம் அவரது குடும்பத்துக்கு சொந்தமாக வேலி தாண்டி இருக்கிறது. அதில் நெல் பயிரிட்டிருக்கின்றனர். மொத்த நிலமும் நீரில் மூழ்கிவிட்டது. அதிலிருந்து வரும் விளைச்சலை நம்பித்தான் குடும்பத்தின் 10 பேர் இருந்தனர்.
















