காலை 7 மணிக்கு டால்டன்கஞ்ச் நகரில் உள்ள சாதிக் மன்ஸில் சௌக் வழக்கமான பரபரப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது - லாரிகள் உறுமுகின்றன, கடைகள் ஷட்டர்களை திறக்கின்றன. பதிவு செய்யப்பட்ட ஹனுமான் சாலிசாவின் ஒலி அருகிலுள்ள கோவிலில் இருந்து தொலைதூரத்திற்கு கேட்கிறது.
ஒரு கடையின் படிகளில் அமர்ந்து, ரிஷி மிஸ்ரா சிகரெட் புகைத்தபடி தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் சத்தமாக பேசுகிறார். அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் மற்றும் புதிய அரசு அமைப்பது தொடர்பாக இன்று காலை அவர்கள் கலந்துரையாடினர். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் வாதிடுவதைக் கேட்டு, தனது உள்ளங்கைகளில் புகையிலையைத் தேய்த்துக் கொண்டிருந்த நசருதீன் அகமது இறுதியாக குறுக்கிட்டு, "ஏன் விவாதம்? யார் அரசு அமைத்தாலும், நாம் வாழ உழைத்து தான் சம்பாதிக்க வேண்டும்," என்கிறார்.
'லேபர் சௌக்' என்றும் அழைக்கப்படும் பகுதியில் தினமும் காலையில் கூடும் பல தினசரி கூலித் தொழிலாளர்களில் ரிஷி மற்றும் நசருதீன் ஆகியோரும் அடங்குவர். பலாமுவைச் சுற்றியுள்ள கிராமங்களில் எந்த வேலையும் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஜார்க்கண்டில் கிராம மக்கள் தினமும் காலையில் வேலை தேடி ஒன்று கூடும் இதுபோன்ற ஐந்து சௌக்குகளில் ஒன்றான சாதிக் மன்சிலில் உள்ள தொழிலாளர் சௌக்கில் (சந்திப்பு) சுமார் 25-30 தொழிலாளர்கள் தினக்கூலி வேலைக்காக காத்திருக்கின்றனர்.








