கேரளாவின் திருச்சூரில் உள்ள பி.வெம்பல்லூர் கிராமத்தில் உள்ள சந்திரன் மாஸ்டர் வீட்டின் வளாகத்திற்குள் பார்வையாளர்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். மாணவர்களும், ஆசிரியர்களும், கால்நடை வளர்ப்புப் பணிகளில் பயிற்சி பெறுபவர்களும், பார்வையாளர்களாக வந்து போகிறார்கள். சில அதிகாரிகள் கூட வருகிறார்கள். ஒரு பொது இடத்தைப் போல அவர்கள் இந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கிறார்கள். ரொம்ப தூரத்திலிருந்தும் இங்கே பார்க்க வருகிறார்கள். அவரிடம் 22 மாடுகளும் இரண்டு காளைகளும் இருக்கின்றன. நமது நாட்டின் அரிதான வகைகள் அவை. அவை மட்டுமல்ல. பல வகையான மாமரங்கள், மூங்கில் வகைகள், மீன் வகைகள் என்று அவரால் பராமரிக்கப்படுகிற இந்திய நாட்டுக்கே உரிய இனங்கள் அவை. ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர் சந்திரன் மாஸ்டர். இந்தியாவின் குதிரை வகையான உன்னதமான கத்தியாவரி குதிரையும், பல வகையான கோழி இனங்களும் அவரிடம் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட அதிகமாக எல்லோரையும் கவர்ந்து இழுப்பவை, உலகின் மிகச்சிறிய மாடு என்று கின்னஸ் புத்தகத்தில் அறிவிக்கப்பட்ட வெச்சூர் எனும் கேரளத்தின் ஊரின் பெயரால் அறியப்படுகிற மாடும், கேரளாவின் கால்நடைகளில் உள்ள மற்ற உயரம் குறைந்த வகைகளும்தான்.
கேரளத்தில் உள்ள கால்நடைகளின் எதிர்காலம் பற்றி, அங்குள்ளவர்களிடையே அதிகரித்துவருகிற கவலையை பிரதிபலிக்கிறது பார்வையாளர்களின் இந்த ஆர்வம். மற்ற இடங்களைப் போலவே, அதிக பால் உற்பத்தியைக் நோக்கமாகக் கொண்ட கலப்பின வளர்ப்பு கால்நடைகளுக்கு வலுவான முக்கியத்துவம் இங்கே தரப்பட்டது. அதன் காரணமாகவும் கேரள மண்ணுக்கே உரிய கால்நடைகளின் எண்ணிக்கை செங்குத்தாக குறைந்துள்ளது. அந்த அணுகுமுறை சரியா என்பது பற்றிய தீவிரமான விவாதம் தற்போது உள்ளது. 1996 க்கும் 2007 க்கும் இடையிலான ஆண்டுகளில் கேரளாவின் கால்நடைகளின் எண்ணிகை 48 சதவீதம் வரை குறைந்துள்ளது.
“கேரளத்தைச் சாராத, வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கால்நடை உயிரணுக்களைப் பயன்படுத்துவதை , 50 சதவீதம் அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும் என்கிறது கால்நடைகளுக்கான புதிய இனப்பெருக்கக் கொள்கை என்று கூறுகிறார் கேரளாவின் கால்நடை பராமரிப்புத் துறையின் (ஏ.எச்.டி) இயக்குனர் டாக்டர் ஆர். விஜயகுமார். “நாங்கள் இப்போது கேரள மண்ணுக்கே உரிய கால்நடை இனங்களைப் பற்றிய கருத்துகளைப் பரப்புகிறோம். கேரள நாட்டுக் காளைகளின் விந்துடன் கூடிய, செயற்கை கருவூட்டலையும் நடத்துகிறோம். ” 1996க்கும் 2007க்கு இடையில் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்தபோது,“ அந்த காலகட்டத்தில் மாநிலத்தில் பசுக்களின் பால் உற்பத்தித் திறன் ஒரு நாளைக்கு சராசரியாக ஆறு லிட்டர் முதல் 8.5 லிட்டர் வரை, உயர்ந்தது. கேரளாவின் கால்நடைகளில் கலப்பின வகைகள் 87 சதவீதம் அளவுக்கு வந்தபோதும் இந்த அளவுக்கு உயர்வு இருந்தது” என்கிறார் அவர்.
இருந்தாலும், கலப்பின மாடுகளுக்கு ஆகிற செலவைவிட அவற்றிலிருந்து பால் உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகம். கேரளாவின் உயரம் குறைவான பசுக்களான, வெச்சூர் மற்றும் காசர்கோடு மாடுகளுக்கான தீவனங்களின் தேவை மிகவும் குறைவு. அவை எவ்வளவு தீவனம் சாப்பிடுகின்றனவோ அதற்கு ஏற்ப அவை கொடுக்கிற பாலின் அளவு நன்றாக இருக்கும். ஆனால், கலப்பின விலங்குகளை மிக அதிகமான அளவுக்கு பராமரிக்க வேண்டும். எளிதில் நோய்கள் வந்துவிடும் அபாயம் அவற்றுக்கு இருக்கிறது. “இந்த வடகரா குள்ள வகையைப் பாருங்கள்” என்கிறார் சந்திரன் மாஸ்டர். “அந்தப் பசுவின் தீனிக்கு நான் தினமும் ஐந்து அல்லது பத்து ரூபாய் செலவு செய்கிறேன் என்பதே சந்தேகம்தான். ஆனால், அது எனக்குத் தினமும் மூன்று அல்லது நான்கு லிட்டர்கள் பால் தருகிறது.அதன் பாலின் தரம் மிகவும் மதிப்பிற்குரியது .ஒரு லிட்டருக்கு 50ரூபாய் கூட எனக்குக் கிடைக்கும். அந்த வகையில் நமக்குக் கிடைக்கிற பயன்கள் அதிகம். அதிக தரமான தீவனத்தை போடவேண்டும் என்பதும் கிடையாது. சமையல் கழிவுகளும் மிஞ்சிப் போனவையும் கூட தீனியாகப் போடுகிறோம். அவற்றுக்குத் தனியான சிறப்பான கொட்டகைகயோ வேறு எதுவுமோ அமைக்க வேண்டும் என்பதும் கிடையாது.” ஆனாலும் அவர் பால் விற்பதில்லை. அதற்கு மாறாக, “என்னால் சமாளிக்க முடியாத அளவுக்கு ஆகிறபோது சில கன்றுக்குட்டிகளை விற்றுவிடுவேன்” என்கிறார் அவர்.



