அது ஞாயிற்றுக் கிழமை காலை. ஆனால் ஜோதிரிந்திரா நாராயண் லஹிரி பிசியாக இருந்தார். ஹூக்லி மாவட்டத்திலிருந்த அவரது வீட்டின் மூலை அறையில், 50 வயதான அவர், 1778ம் ஆண்டு மேஜர் ஜேம்ஸ் ரென்னெலால் தயாரிக்கப்பட்ட முதல் சுந்தவன வரைபடத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
“பிரிட்டிஷின் ஆய்வின்படி தயார் செய்யப்பட்ட முதல் நம்பகத்தன்மையான வரைபடம் இது. சதுப்புநிலக் காடுகள் கொல்கத்தா வரை இருந்ததாக இது காட்டுகிறது. நிறைய மாறியிருக்கிறது,” என்கிறார் லஹிரி, வரைபடத்தில் விரலை வைத்துக் காட்டியபடி. இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் இடையில்தான் உலகின் பெரிய சதுப்புநிலப்பகுதியான சுந்தரவனம் பரவியிருக்கிறது. ராயல் பெங்கால் புலி உள்ளிட்ட பல உயிர்கள் இருக்கும் இடம் அது.
அவரின் அறை சுவர்களில் வரிசையாக இருக்கும் புத்தக அலமாரிகளில் சுந்தரவனம் பற்றி இருக்கும் எல்லா வகை புத்தகங்களும் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. சுந்தரவன பறவைகள், செடிகள், அன்றாட வாழ்க்கை, வரைபடங்கள், குழந்தைகள் புத்தகங்கள் என பலவை ஆங்கிலத்திலும் வங்கமொழியிலும் நிறைந்திருக்கின்றன. இங்குதான் அவர், சுந்தரவனம் பற்றிய காலாண்டு இதழான ‘சுது சுந்தரவன சர்ச்சா’ பத்திரிகையை வடிவமைக்கிறார்.
“இப்பகுதியின் நிலையை பார்க்க பல முறை நான் சென்றிருக்கிறேன். அச்சமேற்படுத்தும் வகையில் அது இருந்தது,” என நினைவுகூருகிறார் அவர். “குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை. மக்கள் வீடுகளை இழந்திருந்தனர். ஆண்கள் பெரும் திரளாக இடம்பெயர்ந்திருந்தனர். பெண்கள்தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை. மக்களின் வாழ்க்கை, ஆற்றங்கரை உடைவதை சார்ந்துதான் இருக்கிறது.”
பேரிடர் குறித்த அறிக்கைகள் மேலோட்டமாக இருப்பதாக லஹிரி கண்டறிந்தார். “சுந்தரவனம் குறித்த வழக்கமான விஷயங்களையே ஊடகங்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன. புலி தாக்குதல் அல்லது மழை ஆகியவற்றை பற்றிதான் நீங்கள் செய்தி பார்க்க முடியும். மழை பெய்யவில்லை என்றாலோ வெள்ளம் வரவில்லை என்றாலோ, சுந்தரவனம் செய்தியில் இடம்பெறுவதில்லை,” என்கிறார் அவர். “பேரிடர், வன உயிர் மற்றும் சுற்றுலா ஆகியவைதான் ஊடகத்தை ஈர்க்கும் விஷயங்கள்.”









