அதிகாலை மூன்று மணி. வெளியே ஆரஞ்சு நிற தார்ப்பாய் கூடாரத்தில் அமர்ந்திருக்கும் நந்தினி, தோழி பிடித்திருக்கும் செல்பேசி வெளிச்சத்தில் ஒப்பனை போட்டுக் கொண்டிருக்கிறார்.
18 வயதான அவர், ஒரு எளிய காட்டன் புடவை கட்டியிருக்கிறார். இன்னும் சில மணி நேரங்களில் மணம் முடிக்கவிருக்கிறார்.
முதல் நாள் மாலை, அவரும் மணமகனான 21 வயது ஜெயராமும் பங்களாமேடிலிருந்து (செருக்கனூர் இருளர் காலனி எனவும் சொல்லப்படுகிறது) நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மாமல்லபுரத்துக்கு வந்து சேர்ந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இக்குழு, சென்னையின் தெற்கே உள்ள கடற்கரையில் கூடாரம் போட்டு தங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான இருளர் குடும்பங்களில் ஒன்று ஆகும்.
கடலோரத் தமிழ்நாட்டின் குளிர்காலம் முடிந்து ஒவ்வொரு மார்ச் மாதமும் கோடை காலம் தொடங்கும்போது, மாமல்லபுரத்தின் (முன்பு மகாபலிபுரம் என அழைக்கப்பட்டது) பொன்னிற மண், வண்ணங்களை சூடுகிறது. புடவைகளாலும் தார்ப்பாய்களாலும் புதிதாக வெட்டப்பட்ட மரத் தண்டுகளைக் கொண்டு எழுப்பப்படும் கூடாரங்களாலும் வசிப்பிடங்களாலும் கடற்கரை நிரம்பியிருக்கும்.
வழக்கமாக உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளால் நிறைந்திருக்கும் இந்த பிரபல கடற்கரை, மாசிமகம் கொண்டாட மாநிலம் முழுக்க வந்திருக்கும் இருளர் சமூகத்தினரால் நிறைந்திருக்கிறது. 2 லட்சம் மக்கள்தொகை (இந்தியாவின் பட்டியல் பழங்குடிகள் புள்ளிவிவரம், 2013) கொண்டிருக்கும் இருளர்கள், அதிகமாக பாதிக்கப்படும் பழங்குடிகளாக (PVTG) வரையறுக்கப்பட்டிருக்கின்றனர்.


























